» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கழிவுமீன் ஆலைகளை மூடக்கோரி 751-வது நாள் போராட்டம் : புதிய அரசு மீது மக்கள் நம்பிக்கை!

வியாழன் 4, ஜூன் 2026 4:54:32 PM (IST)



தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி கிராமத்தைச் சுற்றிச் செயல்பட்டு வரும் 3 தனியார் மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி, அப்பகுதி கிராம மக்கள் இன்று 751-வது நாளாகத் தங்களது அறப்போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றியம், எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொட்டலூரணி, நான்கு கிராமங்களையும் 9 வார்டுகளையும் கொண்ட கிராமமாக திகழ்கிறது. இக்கிராமத்தைச் சுற்றி அமைந்துள்ள 3 மீன் கழிவு ஆலைகளில் இருந்து தொடர்ந்து வீசும் கடுமையான துர்நாற்றம் மற்றும் விஷ வாயுக்கள் காரணமாகப் இப்பகுதியில் வாழ முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

இதனால் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட கடுமையான உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதுடன், உள்ளூர் விவசாயமும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்துத் தங்களது கோரிக்கைகளை கடந்த 7 ஆண்டுகளாக அரசுக்கு வைத்தும் எவ்வித நடடிவக்கையும் எடுக்கப்படாததால், கடந்த 751 நாட்களாக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் இக்கோரிக்கைக்காக மனு அளித்த கிராம மக்கள் மீது பல்வேறு பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, மக்கள் ஒடுக்கப்பட்டதாகப் போராட்டக் குழுவினர் தெரிவிக்கின்றனர். மேலும், கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் இக்கிராம மக்களை வன்மத்துடன் நடத்தியதுடன், ஆலைகள் இயங்குவதற்குக் பின்னணியாகச் செயல்பட்டார் என்றும் பொதுமக்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

தற்போது தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், தங்களுக்கு விடிவு பிறக்கும் எனப் பொட்டலூரணி மக்கள் பலத்த நம்பிக்கை தெரிவித்துள்ளனர். குறிப்பாக, தற்போது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள இத்தொகுதியின் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும், மாநில அமைச்சருமான பெ.மதன்ராஜா இவ்விவகாரத்தில் முழு கவனம் செலுத்தி, மக்களின் நல்வாழ்வுக்கு எதிராகச் செயல்படும் ஆலைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், கடந்த காலப் போராட்டங்களின் போது பொதுமக்கள் மீது பழிவாங்கும் நோக்கில் போடப்பட்ட அனைத்துப் பொய் வழக்குகளையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், கிராமத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகளை முழுமையாகச் செய்து தர வேண்டும் என்றும் தங்களது கோரிக்கைகளை மக்கள் முன்வைத்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory