» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பள்ளி மாணவர்களுக்கு கூலிப் விற்பனை: 2பேர் கைது; கடைகளுக்கு சீல்!
வெள்ளி 18, அக்டோபர் 2024 8:44:27 AM (IST)
கருங்குளத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ‘கூலிப்’ போதைப்பொருள் விற்றதாக 2 வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் கடைகளுக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அடுத்த கருங்குளத்தில் அரசு பள்ளி அருகே மாணவர்களுக்கு சிலர் ‘கூலிப்’ போதைப்பொருள் விற்பனை செய்வதாக எஸ்பி ஆல்பர்ட் ஜானுக்கு புகார் வந்தது. அவரது உத்தரவின் பேரில், ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் ஆலோசனையின் பேரில் நேற்று செய்துங்கநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் தர்மர் தலைமையில் சிறப்பு படை போலீசார் கருங்குளம் அரசு பள்ளிம் பகுதிக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பள்ளிம் அருகே 2 பேர், மாணவர்களிடம் ‘கூலிப்’ போதைப்பொருள் விற்பனை செய்து கொண்டிருந்தனர். உடனடியாக போலீசார் அந்த 2 பேரையும் சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்களிடம் இருந்த போதைப் பொருட்களை பறிமுதல் ெசய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், செய்துங்கநல்லூர் அருகே உள்ள புளியங்குளத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் அசோக்குமார் (49), வசவப்பபுரம் சர்ச் தெருவை சேர்ந்த சின்னதம்பி மகன் பாஸ்கர் (36) என்பதும் தெரியவந்தது.
இதில் அசோக்குமார் செய்துங்கநல்லூரிலும், பாஸ்கர் வசவப்பபுரத்திலும் பெட்டிக்கடை நடத்தி வருவதும், அவர்களின் கடைகளில் ‘கூலிப்’ மற்றும் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த 2 கடைகளிலும் சிறப்பு படை போலீசார் சோதனை நடத்தினர்.
அந்த கடைகளில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 35 கிலோ போதைப்பொருட்கள் சிக்கின. அதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். பின்னர் 2 கடைகளுக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து செய்துங்கநல்லூர், வசவப்பபுரத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கடைகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.