» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கடல் சாகச விளையாட்டு போட்டிகள் : அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
வெள்ளி 18, அக்டோபர் 2024 8:36:02 AM (IST)
தூத்துக்குடியில் கடல் சாகச விளையாட்டு போட்டிகளை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் தேசிய அளவிலான கடல் சாகச விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கியது. இதில் படகில் நின்ற நிலையில் துடுப்பு செலுத்துதல், அமர்ந்த நிலையில் துடுப்பு செலுத்துதல் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடக்கிறது. இந்த போட்டியானது 400 மீட்டர் தூரம் வரை சென்று திரும்பும் வகையில் நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மத்தியபிரதேசம், அரியானா, பீகார், உத்தரகாண்ட், டெல்லி, ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட 22 மாநிலங்களில் இருந்தும் சுமார் 175 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர்.
இந்த போட்டிகள் தொடக்க விழா நேற்று நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன் தலைமை தாங்கினார். மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு போட்டிகளை கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது, அவர் கூறுகையில், தமிழக முதல்-அமைச்சர் கடல்சார் விளையாட்டு பூங்கா அமைக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளார். அந்த விளையாட்டுக்களை முத்துநகர் கடற்கரையில் செயல்படுத்தினால் நன்றாக இருக்கும். அதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்’ என்று கூறினார்.
தொடர்ந்து கடல் சாகச விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில் வீரர், வீராங்கனைகள் சிறிய கயாக்கி படகுகளை வேகமாக ஓட்டி சென்றனர். இந்த போட்டிகள் நாளை (சனிக்கிழமை) வரை நடக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தங்கப்பதக்கம், 2-வது பரிசு வெள்ளி பதக்கம், 3-வது பரிசு வெண்கல பதக்கம் வழங்கப்படுகிறது.
இதில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகள் தாய்லாந்தில் நடைபெறும் ஆசிய கோப்பை போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.