» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வைப்பாற்று நாகரீகத்தின் தொட்டில்: தொல்லியல் ஆர்வலர் தகவல்!
வியாழன் 17, அக்டோபர் 2024 5:12:54 PM (IST)
‘வைப்பாற்று நாகரீகத்தின்’ தொட்டில் என்பது போல் இயற்கையினால் தானாக வரலாற்று தொன்மங்கள் வெளிவந்து குவிந்து வரும் நமது தூத்துக்குடி- தருவைக்குளம் கடற்கரை பகுதி" என்று வரலாறு மற்றும் தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஸ் செல்வரதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம், பட்டினமருதூர் கிராமத்தில் சர்வே எண் 184 கண்மாய் மற்றும் சர்வே எண் 38 பிரதான ஓடை பகுதிகளில் காணப்படும் மணல் கலவைகளால் ஆன ஒரே நேர்கோட்டில் உள்ள சாலை சிதைவுகள் போன்றுள்ளவைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும்,
மேலும் இத்தகைய சிதைவு பாலங்கள் தருவைக்குளத்திற்கு தெற்கேயுள்ள வெள்ளைப்பட்டி கிராமத்திலுள்ள ஸ்ரீ முனியசாமி ஆலய பகுதியிலும் தென்படுவதாகவும் ஊர் மக்கள் தகவல் அளித்தனர் என்றும், செயற்கை கோள் வரைபடம் வாயிலாக உற்று நோக்கும் பொழுது இந்த மூன்று பகுதிகளும் ஓரே நேர்கோட்டில் வருவது வியப்பின் உச்சம் என்றும் இவைகளின் தன்மைகளை விஞ்ஞான ஆய்விற்கு உட்படுத்தி நவீன உத்திகளை பயன்படுத்தி கள ஆய்வு செய்தால் நம் முன்னோர்கள் எந்த பாதையில்? எத்தகைய சாலையினை? எவ்விதமான வாகனங்களை பயன்படுத்தினார்கள் என்ற உண்மை விபரங்களை உலகறிய செய்யலாம் என்றுரைத்தார்.
பொதுவாக மொஹஞ்சதாரோ -ஹரப்பா நாகரீகத்தில் மக்கள் தெளிந்த மணல், களிமண், சுண்ணாம்பு மற்றும் அப்பிரகம் (மைக்கா) போன்றவற்றினை பயன்படுத்தி மற்பாண்டங்கள் மற்றும் கட்டுமானங்களை கட்டியிருந்ததார்கள் என்றும் பொன், வெள்ளி, செம்பு, வெள்ளீயம், காரீயம் கொண்டு பல ஆபகரண பொருட்களை செய்திருந்தார்கள் என்றும் மா.இராசமாணிக்கம் பிள்ளைB.O.L.L.T அவர்களின் 1945ம் ஆண்டு வெளியீடான ‘மறைந்த நகரம்’ என்ற தலைப்பிலான நூலின் 16-19ம் பக்க குறிப்புகளை மேற்கோள் காட்டி தனது கருத்துக்களை பதிவு செய்தார்.
அதேபோல் தான் ஆவணப்படுத்தியுள்ள 13 நாணயங்களுல் ஓர் நாணயத்தின் மீதான நுண்கதிர்(XRF-Test) ஆய்வின் போது பொன்-27.58%, செம்பு-47.85%, வெள்ளி-1.69% மற்றும் மீதமுள்ள 22.88% மற்றவை என குறு அறிக்கையினில் தெரியவந்ததாகவும், அதிலுள்ள எழுத்துக்கள் மிக தொன்மையான வடிவத்தில் உள்ளதாகவும், அதன் நிறம் கருமை நிறமாக இருப்பதனால் அதில் காரீயம் சில சதவிகிதம் கலந்துள்ளதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகம் எனவும், அது காந்தத்தால் கவரப்படாததால் இதில் இரும்பு அல்லாத வேறோர் உலோகம்(வெள்ளீயமாக இருக்கலாம்) கலந்திருக்க வாய்ப்பு அதிகம் என்றும், இந்த பகுதியில் வேப்பலோடை, பட்டினமருதூர் மற்றும் தருவைக்குளம் பகுதிகளில் காணப்படும் குமிழ் தூம்புகளும் செயற்கையாக மணல் கலவைகளால் உருவாக்கப்பட்டுள்ளது போன்றுள்ளது என்றும் தனது ஆய்வின் புரிதல்களை பதிவு செய்தார்.
மேலும் இந்த சாலைப்பகுதியின் கீழ் / மேல் என் இரு பகுதிகளிலும் சுமார் 500மீட்டர் இடை வெளியில் இரண்டு விதமான செந்நிற சுடுமண் வட்ட வடிவ உறை கிணறு போன்று தென்படுவதாகவும். இதில் ஒன்று(சமுக்கமான விளிம்புடன்) சுமார் 115செ.மீ(46.5”) வெளி விட்டமும், மற்றொன்று(அலங்கார விளிம்புடன்) சுமார் 90செ.மீ(38”) வெளி விட்டம் கொண்டவைகளாக உள்ளன என்று தனது கண்டறிதல்களை ஆவணப்படுத்தினார்.
இத்தகைய வரலாற்று எச்சங்களை உடனடியாக ஆவணப்படுத்தி மிக மிக தொன்மையான ஹரப்பா நாகரீகத்திற்கு ஒப்பான (அ) முன்னோடியான இப்பகுதியின் வரலாற்றினை உலகறிய செய்திட மத்திய மாநில அரசுகள் துரிதமாக செயல்படவேண்டும் என்பதை தனது கோரிக்கைகளாக பதிவு செய்தார். நாம் வேகமாக! விவேகமாக! ஒன்றுபட்டால் ‘வின்ஸென்ட் ஸ்மித்’ கூறியது போன்று ‘இந்திய சரித்திரம்; வைகை ஆற்றங்கரையில் இருந்து கட்டப்பெறும்’ நன்னாள் விரைவில்……… என்று வரலாறு மற்றும் தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஸ் செல்வரதி தெரிவித்துள்ளார்.