ஒலிம்பிக் போட்டிகளுக்கு அடுத்தபடியாக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இப் போட்டி, ஜப்பானில் நடைபெறுவது இது 3-வது முறையாகும்.
அக்டோபர் 4-ஆம் தேதி வரை நடைபெறும் இப் போட்டியில் தடகளம், வில்வித்தை, நீச்சல், கூடைப்பந்து, பேட்மிண்டன், குத்துச்சண்டை, கிரிக்கெட், கபடி, துப்பாக்கி சுடுதல், கால்பந்து, ஹாக்கி, பளுதூக்குதல், மல்யுத்தம் உட்பட 43 வகையான விளையாட்டுகளில் 469 பந்தயங்கள் நடத்தப்படுகின்றன.
இதில் இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, வடகொரியா, ஈரான், இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். ஆசிய விளையாட்டு வரலாற்றிலேயே முதல்முறையாக அகதிகள் அணியும் இப் போட்டியில் களம் காண்கிறது.
நகோயாவில் உள்ள மிசுஹோ பார்க் தடகள மைதானத்தில் சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்குத் தொடக்க விழா நடைபெற்றது. ஜப்பான் மன்னர் நருஹிட்டோ போட்டிகளை முறைப்படி தொடங்கி வைத்தார். ராணி மசாக்கோ, இளவரசர் அகிஷினோ, இளவரசி கிகோ மற்றும் ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் ஷேக் ஜோவான் பின் ஹமத் அல் தானி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற ஜப்பான் சங்கிலி குண்டு எறிதல் வீரர் கோஜி முரோபுஷி மற்றும் அவரது தந்தையான ஷிகெனோபு முரோபுஷி ஆகியோர் ஆசிய விளையாட்டுக்கான தீபத்தை ஏற்றி வைத்தனர்.
தொடக்க விழாவின் முக்கிய அம்சமாகப் பங்கேற்கும் நாடுகளின் தேசியக் கொடியுடன் வீரர்கள் கம்பீரமாக அணிவகுத்து வந்தனர். அகர வரிசைப்படி நடைபெற்ற இப் பேரணியில் முதலாவதாக ஆப்கானிஸ்தான் அணியும், நிறைவாகப் போட்டியை நடத்தும் ஜப்பான் அணியும் வந்தன.
இந்திய அணிக்குத் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் மற்றும் கபடி வீரர் பவன் ஷெராவத் ஆகியோர் தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏந்திச் சென்றனர். முன்னதாகக் கொடியேந்திச் செல்லத் தேர்வாகியிருந்த தடகள வீரர் தஜேந்தர் பால் சிங்கிற்கு உரிய நேரத்தில் சீருடை வராததால், கடைசி நேரத்தில் பவன் ஷெராவத் கொடியை ஏந்திச் செல்லும் வாய்ப்பைப் பெற்றார்.

இந்தியத் தரப்பில் 265 வீரர்கள், 231 வீராங்கனைகள் என மொத்தம் 496 பேர் 36 விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். இதில் 15 வயது கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறைந்த வயதுடைய வீரராகவும், 55 வயது குதிரையேற்ற வீராங்கனை ஸ்ருதி வோரா அதிக வயதுடைய வீராங்கனையாகவும் இடம் பெற்றுள்ளனர்.
சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற தொடக்க விழாவில், ஜப்பானின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் வகையில் லேசர் ஒளிவெள்ளத்தில் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. நிறைவாகப் பிரம்மாண்ட வண்ணமயமான வாணவேடிக்கைகள் விண்ணைப் பிளந்தன.

