» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கத்திமுனையில் நகை பறித்த இளம்பெண் கைது : மேலும் ஒருவருக்கு போலீஸ் வலைவீச்சு!!
வியாழன் 25, ஜூன் 2026 7:50:44 AM (IST)
தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக, தனியார் நிறுவன ஓட்டுநரை வீட்டிற்கு அழைத்து கத்திமுனையில் தங்கச் சங்கிலியைப் பறித்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி சக்தி விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் (30), தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்தபோது, ஆறுமுகநேரி பெருமாள்புரத்தைச் சேர்ந்த தங்க நயினார் மனைவி மாரியம்மாள் (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளனர்.
இந்நிலையில், மாரியம்மாளின் குடும்பத்தினர் அருகில் உள்ள ஊரில் நடக்கும் கோவில் கொடை விழாவிற்குச் சென்றதால், அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது மாரியம்மாள், ராம்குமாரைத் தொடர்பு கொண்டு தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். அதன்பேரில் ராம்குமாரும் ஆறுமுகநேரியில் உள்ள மாரியம்மாளின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இருவரும் வீட்டில் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென கதவைத் திறந்து கொண்டு உள்ளே புகுந்த மர்ம நபர் ஒருவர், தான் வைத்திருந்த அரிவாளைக் காட்டி ராம்குமாரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைக் கழற்றித் தருமாறு மிரட்டியுள்ளார். ராம்குமார் சுதாரித்துக்கொண்டு அந்த நபரிடமிருந்து அரிவாளைப் பிடுங்க முயன்றார். அப்போது, மாரியம்மாள் பின்பக்கமாகச் சென்று ராம்குமார் கழுத்தில் இருந்த சுமார் 14 கிராம் தங்கச் சங்கிலியைப் பறித்துள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து, இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவோம் என ராம்குமாருக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ராம்குமார் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சிறப்புச் சார்பு ஆய்வாளர் கோயில்பிள்ளை வழக்குப்பதிவு செய்தார். சார்பு ஆய்வாளர் சுந்தரம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, மாரியம்மாள் கைது செய்யப்பட்டுத் திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இவ்வழக்கில் தொடர்புடைய தப்பியோடிய மற்றொரு மர்ம நபர் யார் என்பது குறித்துப் போலீசார் தொடர்ந்து வலைவீசித் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் நாளை அண்ணாமலை இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம்: கரு நாகராஜன் பங்கேற்பு!
வியாழன் 25, ஜூன் 2026 11:28:11 AM (IST)

இந்திய வீல்சேர் கிரிக்கெட் பிரீமியர் லீக்: ஜம்மு காஷ்மீரை வீழ்த்தித் தமிழ்நாடு அணி சாம்பியன்!
வியாழன் 25, ஜூன் 2026 11:04:23 AM (IST)

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது விற்றவர் கைது: 32 மது பாட்டில்கள், பணம் பறிமுதல்!
வியாழன் 25, ஜூன் 2026 10:52:22 AM (IST)

குடும்பப் பிரச்சினை: பூச்சி மருந்து குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி மரணம்!
வியாழன் 25, ஜூன் 2026 10:44:22 AM (IST)

மாலுமி நிஷாந்த் மனைவிக்குத் தற்காலிகப் பணியா..? நெய்தல் எழுத்தாளர்கள் வாசகர்கள் இயக்கம் கண்டனம்!
வியாழன் 25, ஜூன் 2026 10:38:02 AM (IST)

அனுமதியற்ற விளம்பர பேனர்களை அகற்றாவிட்டால் 3 ஆண்டுகள் சிறை : தூத்துக்குடி மாநகராட்சி எச்சரிக்கை!
வியாழன் 25, ஜூன் 2026 10:17:14 AM (IST)








