» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சீமானின் மகளுக்கு சீர் கொண்டு சென்றது ஏன்? அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ விளக்கம்!

வியாழன் 28, மே 2026 4:04:29 PM (IST)

சீமானின் பெண் குழந்தைக்கு, சீர் கொண்டு சென்றது, "வெறும் குடும்ப உறவின் வெளிப்பாடு மட்டுமே" என்று அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ விளக்கமளித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் இரண்டாவது பெண் குழந்தைக்கு, முன்னாள் அமைச்சரும் திமுக சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் மேளதாளங்கள் முழங்கப் பாரம்பரியச் சீர் கொண்டு சென்று வாழ்த்திய நிகழ்வு அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், அது வெறும் குடும்ப உறவின் வெளிப்பாடு மட்டுமே என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், மறைந்த தமிழகச் சட்டமன்ற முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியருக்கு ஏழு வயதில் ஒரு மகன் உள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கயல்விழிக்கு இரண்டாவதாகப் பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், சென்னை போரூர் பகுதியில் உள்ள சீமானின் இல்லத்திற்கு நேற்று திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் திரண்டு சென்றார். மேளதாள வாத்தியங்கள் முழங்க, பல தாம்பூலத் தட்டுகளில் பழங்கள், இனிப்புகள் மற்றும் மங்கலப் பொருட்களுடன் வந்த அவரை, சீமான் தனது வீட்டின் வெளியே வந்து இன்முகத்தோடு வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். தொடர்ந்து, சீமானின் பெண் குழந்தைக்குத் தனது சொந்தக் கரங்களால் தங்கச் சங்கிலி அணிவித்து அனிதா ராதாகிருஷ்ணன் மகிழ்ந்தார்.

அரசியல் ரீதியாக இருவேறு துருவங்களாக இருக்கும் தலைவர்களின் இந்தச் சந்திப்பு பல்வேறு விவாதங்களைக் கிளப்பிய நிலையில், இது குறித்து சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: "சீமானின் மனைவி கயல்விழியின் தந்தையான முன்னாள் சபாநாயகர் காளிமுத்து அண்ணனோடு எனக்குச் சிறு வயது முதலே மிக நெருங்கிய பழக்கம் உண்டு. 

அரசியல் கடந்து அவரைப் பார்த்து வளர்ந்தவன் நான். அந்த வகையில் கயல்விழி எனக்குச் சொந்தத் தங்கை போன்றவர். அவர் சிறு பிள்ளையாக இருக்கும் காலம் தொட்டே எனக்கு நன்றாகத் தெரியும். தற்போது எனது தங்கைக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தைக்குக் 'காளி' எனப் பெயரிட்டுள்ளனர்.

இந்த மகிழ்ச்சியான விபரத்தை உலகிற்குத் தெரியப்படுத்தவும், ஒரு தாய்மாமன் மற்றும் அண்ணன் என்ற முறையில் எனது கடமையைச் செய்யவும் தான் இத்தனை சீர் வரிசைகளோடு நேரில் சென்றேன். இந்தத் தூய்மையான குடும்ப நிகழ்வை மக்கள் அனைவரும் மனதார வாழ்த்தினார்கள். எங்களின் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் இதற்கு முழு வாழ்த்துகளைத் தெரிவித்தார்." என்றார்.

மேலும், செய்தியாளர்களின் பிற கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், இஸ்லாமியப் பெருமக்கள் எப்போதும் திமுகவின் மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும், மாநிலத்தின் இயற்கை மற்றும் கனிம வளங்களைத் தமிழகத்தின் சொந்தப் பயன்பாட்டிற்காக உரிய அரசு ரசீதுகளுடன் கொண்டு செல்லும் லாரிகளை எவ்வித தடையுமின்றி அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory