» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழக அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் அதிமுக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

செவ்வாய் 17, மார்ச் 2026 11:40:32 AM (IST)



தூத்துக்குடியில் திமுக அரசைக் கண்டித்து அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தமிழகத்தில் நிலவி வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் மற்றும் போதைப்பொருட்கள் புழக்கம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் தூத்துக்குடியில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவின்படி, தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் அருகே உள்ள எம்.ஜி.ஆர் திடலில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களுமான எஸ்.பி. சண்முகநாதன் மற்றும் கடம்பூர் செ. ராஜூ (எம்.எல்.ஏ) ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கினர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் மாவட்டத் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன், அதிமுக அமைப்புச் செயலாளர் சின்னத்துரை மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களான பாஜக வடக்கு மாவட்டத் தலைவர் சரவணகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜாகண்ணன், அமமுக மாவட்டச் செயலாளர்கள் ஜானியல் சாலமோன், பொன்ராஜ், பூலோகபாண்டியன், தமாகா மாவட்டத் தலைவர்கள் எஸ்.டி.ஆர். விஜயசீலன், ராஜகோபால், பாமக மாவட்டச் செயலாளர்கள் பரமகுரு, லட்சுமணன், தமமுக மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் லாரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் முக்கியப் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.

நிர்வாகத் திறனற்ற திமுக அரசைக் கண்டித்தும், மக்கள் விரோதப் போக்கைக் கைவிடக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விண்ணதிரக் கண்டன கோஷங்களை எழுப்பினர். முன்னாள் எம்.எல்.ஏ-க்கள், பேரூராட்சி மற்றும் பகுதிச் செயலாளர்கள், அண்ணா தொழிற்சங்கப் பிரிவினர், மகளிர் அணியினர் எனப் பெரும் திரளான ஆண்களும் பெண்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

தமிழகத்தில் பெருகி வரும் போதைப் கலாச்சாரம் இளைஞர்களின் வாழ்வைச் சீரழிப்பதாகவும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் குற்றம் சாட்டிய தலைவர்கள், சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கத் தவறிய தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital






Thoothukudi Business Directory