» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது : தூத்துக்குடியில் செல்வப்பெருந்தகை பேட்டி

வெள்ளி 6, மார்ச் 2026 4:12:44 PM (IST)



தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை அரசு சிறப்பாகக் கட்டுப்படுத்தி வைத்துள்ளது. பெண்கள் வாழ்வதற்கு உகந்த மாநிலம் தமிழ்நாடு என்று மத்திய அரசே சான்றிதழ் வழங்கியுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அதிமுக - பாஜக கூட்டணி என்பது இயற்கைக்கு மாறானது என நாங்கள் ஆரம்பம் முதலே கூறி வருகிறோம். மக்களால் நிராகரிக்கப்பட்ட இந்தக் கூட்டணி ஒரு 'மூழ்கும் கப்பல்'. அதில் தெரியாமல் ஏறியுள்ள சிலரும் இப்போது இறங்குவதற்கு வாய்ப்புள்ளது. 

திமுக தலைமையிலான 'இந்தியா' கூட்டணி வலிமையானது; இது தமிழக மக்களைத் தலைநிமிரச் செய்யும் கூட்டணி. ஆனால், என்.டி.ஏ கூட்டணி என்பது தமிழக மக்களைத் தலைகுனிய வைக்கும் கூட்டணியாகும். தமிழக உரிமைகளை மோடியும், அமித்ஷாவும் எப்போதெல்லாம் பறிக்க நினைக்கிறார்களோ, அங்கெல்லாம் கையொப்பமிட்டுத் தமிழகத்தைத் தலைகுனிய வைத்தவர்கள் அதிமுகவினர். தேர்தலுக்குப் பிறகு அதிமுக என்ற கட்சி இருக்குமா அல்லது அந்தக் கட்சியை பாஜக விழுங்குமா என்பதுதான் இப்போதுள்ள பெரிய கேள்வி.

பீகாரில் நிதிஷ் குமாரைப் பதவியிலிருந்து இறக்கிவிட்டு, அவரை மாநிலங்களவைக்கு அனுப்ப பாஜக திட்டமிட்டுள்ளது. அங்கு பாஜகவைச் சேர்ந்த ஒருவரை முதலமைச்சராக்க முயற்சி நடக்கிறது. அதேபோன்று, தமிழகத்தில் அதிமுகவைக் கபளீகரம் செய்வதற்கான திட்டத்தை மோடியும், அமித்ஷாவும் வகுத்துள்ளனர். இதில் ஏமாந்து போன அதிமுக, எதற்காகத் தன் உரிமைகளைத் தாரைவார்க்கிறது என்று தெரியவில்லை.

டெல்லியில் உள்ள மத்திய அரசிடம் எல்லாவற்றையும் அடகு வைத்துவிட்டு, 'தப்பித்தால் போதும்' என்ற நோக்கில் அதிமுக அரசியல் செய்கிறது. 1996 தேர்தல் முடிவுகள் எப்படி இருந்ததோ, அதேபோன்ற ஒரு முடிவைத் தான் மக்கள் இந்தத் தேர்தலிலும் வழங்குவார்கள்.

காங்கிரஸ் கட்சியில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம். ஆனால், அகில இந்தியத் தலைமையின் முடிவே இறுதியானது. தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் வழிகாட்டுதலில் நாங்கள் எவ்விதக் குழப்பமுமின்றி இணக்கமாகச் செயல்பட்டு வருகிறோம். தேர்தல் தொகுதிகள் மற்றும் பிரச்சாரப் பயணங்கள் குறித்துத் தற்போது ஆலோசித்து வருகிறோம்.

வன்முறை மற்றும் ஜாதிய வன்கொடுமைகள் எங்கு நடந்தாலும் அவை கண்டிக்கத்தக்கவை. அதிமுக ஆட்சியில் நடந்தவற்றை ஒப்பிடாமல், இப்போது நடப்பவற்றை மட்டும் விமர்சிப்பது நியாயமல்ல. பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் தலித் மக்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை அதிமுக கவனிக்க வேண்டும்.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை அரசு சிறப்பாகக் கட்டுப்படுத்தி வைத்துள்ளது. பெண்கள் வாழ்வதற்கு உகந்த மாநிலம் தமிழ்நாடு என்று மத்திய அரசே சான்றிதழ் வழங்கியுள்ளது. ஜாதிய மோதல்களைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை என்றார். பின்னர் அவர் நாங்குநேரி வன்முறை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக காரில் புறப்பட்டுச் சென்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory