» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெட்ரோல் பங்க் மேலாளர் வெட்டிக் கொலை: துப்பாக்கி முனையில் 2பேர் கைது!

திங்கள் 31, மார்ச் 2025 7:48:40 PM (IST)



கயத்தாறு அருகே பெட்ரோல் பங்க் மேலாளர் கொலை வழக்கு தொடர்பாக காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த 2 பேரை துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அருகே உள்ள காப்புலிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்லையா  மகன் சங்கிலி பாண்டி (29). இவர் கடம்பூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் வழக்கம்போல தனது பைக்கில் சங்கிலி பாண்டி வேலைக்கு சென்றுள்ளார். 

இந்நிலையில் கயத்தாரில் இருந்து கடம்பூர் செல்லும் சாலையில் சத்திரப்பட்டி அருகே சங்கிலி பாண்டி சென்ற பைக் விபத்துக்குள்ளாகி அவர் உயிரிழந்து கிடப்பதாகவும், அருகில் ஆளில்லாத கார் ஒன்றும் இருப்பதாகவும் கயத்தார் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் சுகாதேவி தலைமையில் போலீசார் விரைந்து சென்று சங்கிலி பாண்டி உடல் மற்றும் காரை மீட்டனர். சங்கிலி பாண்டி உடல் பகுதியில் அரிவாள் வெட்டு காயங்கள் இருந்ததால் நடந்தது விபத்து கிடையாது சங்கிலி பாண்டி வெட்டி படுகொலை செய்தது தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் சங்கிலி பாண்டி உடலை உடற்கூறு ஆய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மோப்ப நாய் ஜியா மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. கொலை செய்தவர்கள் காரை விட்டுச் சென்றதால் காரின் உரிமையாளர் குறித்து போலீசார் விசாரணை தொடங்கினர். 

அதுமட்டுமின்றி குற்றவாளிகள் வெளியே சென்றிருக்க வாய்ப்பில்லை என்பதால் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன், கயிற்றால் காவல் நிலைய ஆய்வாளர் சுகாதேவி மற்றும் தனிப்படை பிரிவு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் மூன்று பிரிவுகளாக குற்றவாளிகளை  தேட தொடங்கினர். அப்போது காட்டுப்பகுதியின் மையப் பகுதியில் நின்று கொண்டிருந்த இரண்டு பேர் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசாரை பார்த்ததும், தங்கள் கையில் வைத்திருந்த அரிவாள்களை போலீசார் மீது இருவரும்  வீசினார். 

சற்றும் இதை எதிர்பாராத போலீசார் விலகியதால் தப்பித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தியதில் காப்பிலிங்கம் பட்டி கிராமத்தைச் சேர்ந்த சண்முகராஜ் மற்றும் மகாராஜன் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார்  இருவரையும் கைது செய்து கயத்தாறு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் 

கைது செய்யப்பட்டுள்ள சண்முகராஜ் மனைவி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கொலை செய்யப்பட்ட சங்கிலி பாண்டிக்கும்,, சண்முகராஜ் மனைவிக்கும் தொடர்பு இருந்ததாகவும், இது வெளியே தெரிய வந்ததால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. 

தன்னுடைய தற்கொலை செய்து கொண்டதற்கு சங்கிலி பாண்டி தான் காரணம் என்று நினைத்த சண்முகராஜ் அவ்வப்போது மறைப்பதும் திட்டுவதுமாக இருந்துள்ளார். இந்தச் சூழ்நிலை தான் இந்த கொலைச் சம்பவத்தை அரங்கேற்றி இருக்கலாம் என்று போலீசார் கூறுகின்றனர்.

காரை ஏற்றி கொலை செய்துவிட்டு விபத்து போல் ஜோடித்துவிடலாம் என்று நினைத்த நிலையில் படுகாயத்துடன் சங்கிலி பாண்டி தப்பித்து விட்டதால், தங்களை எங்கே காட்டிக் கொடுத்து விடுவாரோ? என்ற எண்ணத்தில் கீழே இறங்கி அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பித்து ஓடிருக்கலாம் என்றும் போலீசார் கூறுகின்றனர்.

இருவர் மட்டும் கொலை செய்தனரா? இதில் வேற யாருக்கும் தொடர்பு உள்ளதா? சண்முகராஜ் மனைவி தற்கொலை செய்து கொண்டதற்கு  தான் இந்த கொலையா? வேறு ஏதும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital




New Shape Tailors

CSC Computer Education




Thoothukudi Business Directory