» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டி பகுதியில் கொட்டித் தீர்த்த மழை: ரயில்வே சுரங்கப் பாதையில் வெள்ளம்!!
வியாழன் 24, அக்டோபர் 2024 8:26:15 AM (IST)
கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை ஒன்றரை மணி நேரம் பலத்த மழை கொட்டித் தீர்த்தது.
வடகிழக்குப் பருவமழையின் தொடக்கம்முதலே கோவில்பட்டி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனிடையே, கடந்த 2 நாள்களாக வானம் மேகமூட்டமாகக் காணப்பட்டதுடன், சாரல் மட்டுமே பெய்து வந்தது.
நேற்று காலைமுதல் வெயிலின் தாக்கம் அதிகமிருந்த நிலையில், மாலை 4 மணியளவில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. ஒன்றரை மணி நேரம் நீடித்த மழையால், பிரதான சாலை, பசுவந்தனை சாலை, மந்தித்தோப்பு சாலை உள்பட பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இடி-மின்னலால் பெரும்பாலான இடங்களில் மின் தடை ஏற்பட்டது.
கோவில்பட்டி -இளையரசனேந்தல் சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் அதிகளவு மழைநீர் தேங்கியதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. கிருஷ்ணா நகர், இலுப்பையூரணி பகுதிகளில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.
மழை காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் வீடு திரும்ப தாமதானதால் பரிதவிப்புக்கு உள்ளாகினர். நகர் முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றனர். கழுகுமலை, காமநாயக்கன்பட்டி, கயத்தாறு உள்ளிட்ட பகுதியிலும் பலத்த மழை பெய்தது.