» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் : ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு!
வியாழன் 24, அக்டோபர் 2024 11:40:35 AM (IST)
"உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின்கீழ், கயத்தார் ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு செய்தார்.
மக்களை நாடி அவர்களின் குறைகளைத் தீர்க்க தமிழ்நாடு அரசின் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின்கீழ், இன்று (24.10.2024) தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் ஊராட்சி ஒன்றியம் கே.குப்பனாபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவ மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர், காலை உணவு திட்ட ஊழியர்களிடம் உணவுகள் சரியான முறையில் வருகிறதா, உணவுகள் தரம் குறித்து ஆய்வு செய்து சரியான முறையில் மாணவ மாணவியர்களுக்கு பரிமாறப்படுகிறதா என கேட்டறிந்து, மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். திட்ட இயக்குநர் (த.மா.ஊ.வா.இ) மல்லிகா, கயத்தார் வட்டாட்சியர் சுந்தரராகவன், கயத்தார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
முன்னதாக சன்னதுபுதுக்குடியில் உள்ள துணை மின் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, நுகர்வோர்களுக்கு சீரான மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்தல், நுகர்வோர்களிடமிருந்து வரக்கூடிய புகார்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல், புதிய மின் இணைப்புகள் விரைந்து வழங்குதல் போன்ற பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர், திடீர் ஆய்வு மேற்கொண்டு, வருகைப் பதிவேடு, புறநோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், மருந்து பொருட்களின் இருப்பு குறித்து மருத்துவர் மற்றும் செவிலியர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, மருத்துவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.