» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நகை கடை அதிபர் உட்பட 3 பேர் கைது: தூத்துக்குடியில் பரபரப்பு.
வியாழன் 24, அக்டோபர் 2024 8:41:59 AM (IST)
தூத்துக்குடியில் 3 வீடுகளில் நகை திருடிய வழக்கில் நகைக் கடை அதிபர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். 18 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மில்லர் புரத்தைச் சேர்ந்தவர் நல்ல பெருமாள் மகன் சின்ன கண்ணன் (60). இவரது வீட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 17 பவுன் தங்க நகை திருடுபோய்விட்டது. இதுபோல் தூத்துக்குடி டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்த பொன் முத்து மகன் செல்வராஜ் (70) என்பவர் வீட்டிலும் 4 பவுன் நகை திருட்டுப் போனது. மேலும் புது கிராமம் வழக்கறிஞர் வீட்டிலும் நகை திருட்டு போனது.
இந்த மூன்று வழக்குகள் சம்பந்தமாக தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே இந்த திருட்டு வழக்குகள் சம்பந்தமாக தூத்துக்குடி டவுன் ஏஎஸ்பி மதன் தலைமையில் தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் சுடலைமுத்து மற்றும் மாணிக்கராஜ் உட்பட தனிப்படையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் தூத்துக்குடி பி அன் டி காலனி 12வது தெருவை சேர்ந்த பேச்சிமுத்து மகன் செந்தூர் பாண்டி வயது 36 என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் செந்தூரப்பாண்டி 3 பேர் வீடுகளிலும் திருடிய 18 பவுன் நகைகளை தூத்துக்குடி செல்வ விநாயகபுரம் 2வது தெருவை சேர்ந்த அய்யாதுரை மகன் அருண் விஜயகுமார் (39) என்ற நகைக்கடை அதிபரிடம் விற்பனை செய்ததாக கூறினார்.
மேலும் இதற்கு உடந்தையாக இருந்த நந்தகோபாலபுரம் துரை மகன் கந்தசாமி (42) ஆகியோரையும் கைது செய்து அவரிடமிருந்து 18 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர். மீட்கப்பட்ட நகைகளின் மதிப்பு ரூபாய் 8 லட்சம் ஆகும். திருடுவதற்காக பயன்படுத்திய செந்தூர்பாண்டி இடமிருந்து ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 3பேரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.