» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: கனிமொழி எம்பி ஆய்வு
செவ்வாய் 22, அக்டோபர் 2024 4:57:43 PM (IST)
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கீழ்தாமிரபரணி மற்றும் கோரம்பள்ளம் வடிநிலக் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் நிரந்தர மறுசீரமைப்புப் பணிகளை கனிமொழி எம்பி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பல்வேறு துறைகள் மூலமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது. மேலும், கடந்த வருடம் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்கால அடிப்படையில் நிரந்தர மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டும், ஒரு சில பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, திருவைகுண்டம் வட்டம், வசவப்பபுரம் - கருங்குளம் கிராமத்திலுள்ள குட்டைக்கல் கண்மாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் ரூ.75 இலட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள கரை பலப்படுத்துதல், தடுப்புச்சுவர் மற்றும் மதகு அமைத்தல் உள்ளிட்ட நிரந்தர மறுசீரமைப்புப் பணிகளையும்,
முறப்பநாடு முக்கவர் கால்வாயில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளையும், செந்நெல்பட்டி செல்லும் சாலையிலுள்ள பாலத்தில் மேற்கொள்ள வேண்டிய நிரந்தர மறுசீரமைப்பு பணிகள் குறித்தும், முறப்பநாடு கோவில்பத்து அருகில் உள்ள மருதூர் மேலக்கால் அணைக்கட்டினையும், பத்மநாபமங்களம் அருகில் உள்ள கஸ்பா குளத்தில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் மூன்று கட்டங்களாக ரூ.5.46 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரை பலப்படுத்துதல்,
தடுப்புச்சுவர் மற்றும் அலைக்கற்கள் அமைத்தல் உள்ளிட்ட நிரந்தர மறுசீரமைப்புப் பணிகளையும், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காலாங்கரை கிராமம் கோரம்பள்ளம் கண்மாயில், கடந்த வருடம் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கோரம்பள்ளம் கண்மாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிரந்தர மறுசீரமைப்புப் பணிகளையும்,
தொடர்ந்து, தூத்துக்குடி வட்டத்திற்குட்பட்ட காலங்கரை - அத்திமரப்பட்டி வழியாக செல்லும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கோரம்பள்ளம் ஆற்றின் (உப்பாத்து ஒடை) குறுக்கே நெடுஞ்சாலைத்துறை, நபார்டு மற்றும் கிராம வங்கியின் மூலம் ரூ.14.88 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றும் வரும் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகளையும், கோரம்பள்ளம் ஆற்றின் இருபுறங்களிலும் (உப்பாத்து ஒடை) ரூ.5.91 கோடி செலவில் நடைபெற்று வரும் கரைகள் பலப்படுத்தும் பணிகளையும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, நடைபெற்றுவரும் அனைத்து நிரந்தர மறுசீரமைப்பு பணிகளையும் உரிய காலத்திற்குள் முடிக்க வேண்டுமென சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், உதவி செயற்பொறியாளர் சிவராஜன், உதவி பொறியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.