» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மயில்கள் மர்ம சாவு: வனத்துறை விசாரணை!
செவ்வாய் 22, அக்டோபர் 2024 4:52:29 PM (IST)
கயத்தாறு அருகே 14க்கும் மேற்பட்ட மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா செட்டிகுறிச்சி பஞ்சாயத்தில் வடக்கு கோனார் கோட்டை கிராமத்தில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மயில்கள் இறந்து கிடந்துள்ளன. அதே போன்று அங்குள்ள கிணறு ஒன்றில் 5க்கும் மேற்பட்ட மயில்கள் இறந்து கிடந்துள்ளன. மேலும் சில மயில்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
இதனைப் பார்த்த பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். 14க்கும் மேற்பட்ட மயில்கள் உயிரிழந்த நிலையில் காணப்படுகின்றன. மேலும் சில மயில்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றன. இதனை கைப்பற்றி வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். மயில்கள் விஷம் வைத்துக் கொள்ளப்பட்டதா அல்லது விலங்குகள் கடித்து உயிரிழந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தப் பகுதியில் விவசாய நிலங்களில் மக்காச்சோள பயிர்கள் அதிகளவு பயிரிடப்பட்டுள்ளது. பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோள விதைகளை அதிகளவு மயில்கள் அதிகளவு சாப்பிட்டு இருந்தாலும் ஜீரணமாகாமல் உயிரிழக்க வாய்ப்பிருப்பதாகவும், இறந்து போன மயில்களை மருத்துவ பரிசோதனை செய்த பிறகு தான் மயில்கள் எப்படி இறந்தது என்பது முழுமையாக தெரியவரும் என்றுவனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதியில் மக்காச்சோள விதைகளை விவசாயிகள் ஊன்றி வருகின்றனர். மான், காட்டுப்பன்றிகள், மக்காச்சோள பயிர்களை அழிக்கும், மேலும், விதைகளை மயில்கள் மொத்தமாக கூட்டமாக வந்து விதைகளை பொறுக்கி விடுகின்றன. இதற்காக இப்பகுதியில் உள்ள விவசாயிகள் காலை நான்கு மணிக்கு மாலை ஆறு மணிக்கு மேல் தோட்டத்திற்கு சென்று மயில்களை விரட்டி வருகின்றனர். இந்த நிலையில் மயில்கள் கூட்டம் கூட்டமாக இறந்து கிடப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.