» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தரமற்ற முறையில் வீட்டை கட்டி கொடுத்த ஒப்பந்தகாரர் ரூ.6,44,625 வழங்க உத்தரவு!
செவ்வாய் 22, அக்டோபர் 2024 3:27:21 PM (IST)
தரமற்ற முறையில் வீட்டை கட்டி கொடுத்த ஒப்பந்தகாரர் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு ரூ.6,44,625 வழங்க வேண்டுமென தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
திருச்செந்தூர் தாலுகா வீரபாண்டியன் பட்டினத்தைச் சார்ந்த லிவியன் மரியான்ஸ் என்பவர் திருச்செந்தூரில் உள்ள ஒரு ஒப்பந்தகாரரிடம் வீடு; கட்ட ஒப்பந்தம் செய்துள்ளார். அதற்கான தொகையையும் செலுத்தி விட்டார். ஒப்பந்தத்தில் கூறியபடி தரமான சிமெண்ட் மற்றும் இதர பொருட்களை உபயோகிக்காததால் தரமற்ற முறையில் கட்டிடத்தை கட்டியிருப்பதால் வீடு பாதுகாப்பாக வசிக்கக் கூடிய சூழ்நிலையில் அமையவில்லை. ஆகவே மீண்டும் வேறு ஒரு பொறியாளரிடம் மீண்டும் பணம் கொடுத்து வீட்டை ரிப்பேர் செய்துள்ளார்.
இதனால் பாதிப்படைந்த நுகர்வோர் வழக்கறிஞர் மூலம் மீண்டும் வீட்டை ரிப்பேர் செய்வததற்கான பணத்தை கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் ஒப்பந்தகாரரின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோரிடமிருந்து வீட்டை ரிப்பேர் செய்ததற்கான தொகையான ரூ.5,34,625-ஐ செலுத்த வேண்டுமென்றும், சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு ரூ.1,00,000 மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.10,000 ஆக மொத்தம் ரூ.6,44,625-ஐ இரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் இல்லையென்றால் வழக்குத் தொடர்ந்த நாள் முதல் 9 % வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.