» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெட்ரோல் பங்க் அதிபரை கடத்திய 2 பேர் கைது : கார், துப்பாக்கி பறிமுதல்
சனி 21, செப்டம்பர் 2024 8:16:21 AM (IST)
கோவில்பட்டி அருகே பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளரை காரில் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர். கார், துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நாலாட்டின்புத்தூர் அருகே காவல் ஆய்வாளர் அருள் சாம்ராஜ் தலைமையில் போலீசார் நேற்று வாகனச் சோதனையில் இருந்தனர். அப்போது திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது, அதிலிருந்து நபர் தன்னைக் கடத்திச் செல்வதாகப் போலீசாரிடம் கூறினாராம்.
இதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த நபர் கோவில்பட்டி ஜோதிநகரைச் சேர்ந்த குழந்தைசாமி மகன் முத்துக்குமார் (47) என்பதும், நாலாட்டின்புதூர் பெரிய பாலத்தின் அருகில் பெட்ரோல், டீசல் விற்பனை நிலையம் நடத்தி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து முத்துக்குமாரை மீட்ட போலீசார், அவரைக் கடத்தி வந்த இருவரையும் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தி வரும் முத்துக்குமார், கழுகுமலையைச் சேர்ந்த தனது உறவினர் ராமகிருஷ்ணனிடம் ரூ.33 லட்சம் கடன் வாங்கி இருந்தாராம். பின்னர் அத் தொகையை திருப்பி கொடுத்துவிட்டாராம். இந்த நிலையில், ராமகிருஷ்ணன் கடன் வாங்கியிருந்த மற்ற நபர்களிடம், தனக்கு முத்துக்குமார் இன்னும் கடனைத் திருப்பித் தரவில்லை என்று கூறினாராம்.
இதையடுத்து ராமகிருஷ்ணனுக்கு பணம் கொடுத்தவர்கள், முத்துக்குமாரிடம் பணம் கேட்டு தொடர்ந்து மிரட்டினராம். இந்த நிலையில், பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு முத்துக்குமார் மோட்டார் சைக்கிளில் நேற்று சென்றபோது, காரில் வந்தவர்கள் அவரை மிரட்டி கடத்திச் சென்று கொண்டிருந்தபோது போலீசாரிடம் பிடிபட்டனர்.
முத்துக்குமாரை காரில் கடத்தி வந்த தூத்துக்குடி வி. இ.ரோட்டை சேர்ந்த விக்டர் ஞானராஜ் மகன் செல்வகுமார் (69), திருநெல்வேலி தாழையூத்து சங்கர் நகரைச் சேர்ந்த சுப்பு மகன் ஐயப்பன் (46) ஆகிய இருவரையும் கைது செய்தனர். கடத்தலுக்குப் பயன்படுத்திய கார் மற்றும் கைத் துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். முத்துக்குமாரின் மோட்டார் சைக்கிளைப் பறித்துச் சென்ற மற்றொரு நபரைப் போலீசார் தேடி வருகின்றனர்.