» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளப் பாதிப்புகளை உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

திங்கள் 25, டிசம்பர் 2023 12:26:09 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளப் பாதிப்புகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு, விவசாயிகளிடம் பயிர் சேதங்கள் குறித்து கேட்டறிந்தார். 

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெய்த அதிகனமழையின் காரணமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணிகளும், நிவாரணப் பணிகளும் மற்றும் கணக்கெடுப்பு பணிகளும் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் வடிந்து பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். 

மேலும், கனமழையின் காரணமாக தண்ணீர் தேங்கியிருந்த பகுதிகளில் மழைநீர் வெளியேற்றப்பட்டு, ஒரு சில இடங்களில் மழைநீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனைத்தொடர்ந்து, தூய்மைப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள அனைத்துத்தரப்பு மக்களுக்கும் நோய்த்தடுப்பு சிகிச்சை வழங்குவதற்காக சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிகனமழையின் காரணமாகவும், தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாகவும் திருவைகுண்டம் வட்டம் முறப்பநாடு பகுதியில் மருதூர் மேல்க்கால்வாய் இருந்து பக்கப்பட்டி வழியாக செல்லும் பாசனக் கால்வாயில் அதிக நீர்வரத்து காரணமாகப் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை நேரில் பார்வையிட்டு, விவசாயிகளிடம் பயிர் சேதங்கள் குறித்து கேட்டறிந்தார்கள். 

தொடர்ந்து திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் மங்களக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களை சந்தித்து, சேத விவரங்களையும், அவர்களது கோரிக்கைகளையும் கேட்டறிந்து, அவர்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டார்கள். பெருங்குளம் பேரூராட்சி கீழமங்கலக்குறிச்சியில் முழுவதும் சேதமான வீடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அப்பகுதி மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் அங்குள்ள கோயிலுக்கு மண்டபம் கட்ட நிதி உதவி வழங்கினார். 

ஏரல் பகுதியில் பாதிக்கப்பட்ட வணிக பெருமக்களை சந்தித்து, அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள். தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட ஏரல் மேம்பாலத்தினை ஆய்வு செய்தார்கள்.  ஏரல் பேரூராட்சியில் உள்ள ஜெ.ஜெ. திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த நிவாரண முகாமில் தங்கியிருந்தவர்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை வாங்கினார். திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் வாழவள்ளான் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்டு, பொதுமக்களை சந்தித்து, சேத விவரங்களையும், அவர்களது கோரிக்கைகளையும் கேட்டறிந்து, அவர்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.



ஆய்வின் போது, பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு, மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா மற்றும் அரசு அலுவலர்கள் உடன் சென்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory