தூத்துக்குடி மாவட்டம் முறைப்பநாடு அருகே ரீல்ஸ் வீடியோ பதிவிடுவதில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, மனைவியைக் கழுத்தை நெரித்து ஓடை நீரில் மூழ்கடித்துக் கொலை செய்த கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை நடுவக்குறிச்சியைச் சேர்ந்தவர் பரமசிவன் மகன் செல்லப்பாண்டி என்ற ஆறுமுகப்பாண்டி (33). கொத்தனாராக வேலை செய்து வரும் இவருக்கும், ஆறுமுகக்கனி (29) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 2 மாதங்களாக ஆறுமுகப்பாண்டி தூத்துக்குடி மாவட்டம் முறைப்பநாடு அருகேயுள்ள காசிலிங்கபுரம் கிராமத்தில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், மனைவி ஆறுமுகக்கனி அடிக்கடி செல்போனில் 'ரீல்ஸ்' வீடியோக்களைப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்துள்ளார். இதைக் கணவர் கண்டித்ததால் இருவருக்கும் இடையே குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

நேற்று இரவும் ரீல்ஸ் போட்டது தொடர்பாக மனைவியைக் கண்டித்த ஆறுமுகப்பாண்டி, பின்னர் அவரை சமாதானப்படுத்தி பாறைக்காடு கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்குச் செல்லலாம் எனக் கூறி மோட்டார் பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார்.

ஈசா ஓடை அருகே சென்றபோது வாகனத்தை நிறுத்திய ஆறுமுகப்பாண்டி, ஆள்நடமாட்டம் இல்லாத சூழலைப் பயன்படுத்தி மனைவி ஆறுமுகக்கனியின் கழுத்தை நெரித்துள்ளார். பின்னர் மயக்கமடைந்த அவரை ஓடை நீரில் மூழ்கடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். கொலைக்குப் பின் அங்கிருந்து சென்ற ஆறுமுகப்பாண்டி, இன்று காலை முறைப்பநாடு காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகிச் சரணடைந்தார்.

இதனைத் தொடர்ந்து, காவல் ஆய்வாளர் ஹரிகரன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆறுமுகக்கனியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் ஆறுமுகப்பாண்டியை அதிகாரப்பூர்வமாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரீல்ஸ் வீடியோ மோகத்தால் மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.