» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
"உன்னால் முடியும்... பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம்!
திங்கள் 27, பிப்ரவரி 2023 5:22:24 PM (IST)
நாகலாபுரத்தில் பொதுத் தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான "உன்னால் முடியும் ஜெயித்துக்காட்டு" என்னும் சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரத்தில் வட்டார கல்வி மற்றும் வளர்ச்சி குழு சார்பில் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவ-மாணவியர்கள் அடுத்து நடக்க இருக்கும் அரசு பொது தேர்வில் அச்சமின்றி தேர்வினை நல்ல முறையில் எழுதி, அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு வழிகாட்டும் வகையில் "உன்னால் முடியும் ஜெயித்து காட்டு" என்ற ஒரு நாள் சிறப்பு பயிற்சி நடைபெற்றது.
பயிற்சி முகாமில் நாகலாபுரம், காடல்குடி, கவுண்டன்பட்டி, செங்கோட்டை, கோடாங்கிபட்டி, கரிசல்குளம், என்.வேடப்பட்டி உட்பட பல்வேறு பகுதியில் உள்ள பள்ளிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் இந்த சிறப்பு பயிற்சியில் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்வின் போது சுற்றுவட்டார பகுதியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒவ்வொரு பள்ளியிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு பதக்கங்கள், ஊக்கத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளை கௌரவிக்கும் விதமாக நாகலாபுரம் வட்டார கல்வி மற்றும் வளர்ச்சிக்குழு சார்பில் கேடயங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் நாகலாபுரம் வட்டார கல்வி மற்றும் வளர்ச்சி குழு தலைவர் சுபாஷ் சந்திர போஸ், துணைத் தலைவர் தெய்வேந்திரன், செயலாளர் கிருஷ்ண பரமாத்மா, பொருளாளர் தெய்வராஜன், இணைச்செயலாளர் சேகர் உட்பட நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.