» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி சார்பில் தொழில் முனைவோர் மேம்பாடு பயிற்சி
வியாழன் 23, பிப்ரவரி 2023 4:55:24 PM (IST)
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் "மீன்வளத்தில் தொழில் முனைவோர் மேம்பாடு” என்ற 2 நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் ஓர் அங்கமான மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடியின் மீன்வள விரிவாக்கம், பொருளியியல் மற்றும் புள்ளியியல் துறையின் மூலம் "மீன்வளத்தில் தொழில் முனைவோர் மேம்பாடு” என்ற இரண்டு நாள் பயிற்சி 22.02.2023 முதல் 23.02.2023 வரை அளிக்கப்பட்டது.
இப்பயிற்சியில் மீன்வளத்தில் தொழில் முனைதலுக்கான வாய்ப்புகள், தொழில் முனைவோருக்கான நற்பண்புகள், மீன் மற்றும் மீன் உபப்பொருட்களின் தற்போதைய வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி, அலங்கார மீன் வளர்ப்பில் தொழில் முனைதல், நன்னீர் மீன்வளர்ப்பில் தொழில் முனைதல், கடல்சார் மீன் வளர்ப்பில் தொழில் முனைதல், மீன்பதனம் மற்றும் மதிப்பூட்டுதலில் தொழில்முனைதல் போன்றவைகள் குறித்த விளக்கவுரைகளும் பயிற்சிகளும் அளிக்கப்பட்டது. இப்பயிற்சியின் நிறைவுவிழா இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியினை ந.வ.சுஜாத்குமார் முதல்வர் (பொ), மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தலைமை தாங்கி பயிற்சியாளர்களுக்கு சான்றிதழினை வழங்கி சிறப்பித்தார். அவர்தம் தலைமையுரையில் மீன்வளத்தில் தொழில் முனைதலின் முக்கியத்துவத்தையும், தேவைகளையும் மற்றும் எதிர்கால வாய்ப்புகளையும் குறித்து எடுத்துரைத்தார். மேலும், பயிற்சி நடத்திய விதம் குறித்த கருத்துக்களை பயிற்சியாளர்கள் எடுத்துரைத்தனர். கோ. அருள் ஓளி, உதவிப்பேராசிரியர், மீன்வள விரிவாக்கம், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை இப்பயிற்சி நடத்தி ஓருங்கிணைத்தார்.