» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
சயத் முஸ்தாக் அலி டி20: இறுதி போட்டிக்கு முன்னேறியது தமிழ்நாடு அணி!
சனி 20, நவம்பர் 2021 5:41:14 PM (IST)
சயத் முஸ்தாக் அலி டி20 தொடரில் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழக அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
புதுடெல்லியில் இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 18.3 ஓவர்களில் 90 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 91 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தமிழக அணி, 34 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. தமிழக அணியின் மிதவேகப் பந்துவீச்சாளர் பி.சரவணன் அபாரமாகப் பந்துவீசி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
3.3 ஓவர்கள் வீசிய சரவணன் 2 மெய்டன்கள் எடுத்து 21 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சரவணன் பந்துவீச்சில் ஹைதராபாத் அணியின் கேப்டன் தன்மே அகர்வால் (1), திலக் வர்மா (8), பிரக்னே ரெட்டி (8), ஹிமாலே அகர்வால் (0) தியாகராஜன் (25) ஆகியோர் விக்கெட்டைப் பறிகொடுத்தனர். சரவணனுக்கு இது 3-வது டி20 போட்டியாகும். உறுதுணையாகப் பந்துவீசிய தமிழக வீரர் முருகன் அஸ்வின், முகமது தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதற்கு முன் தமிழக வீரர் ரஹில் ஷா 12 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதே சிறந்த பந்துவீச்சாக இருந்து வருகிறது. அதற்கு அடுத்தாற்போல் 2-வது பந்துவீச்சு சரவணன் பந்துவீச்சாகும். ஹைதராபாத் அணியில் தன்மே தியாகராஜன் (25) மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். திங்கள்கிழமை நடக்கும் இறுதி ஆட்டத்தில் கர்நாடக அணியுடன் மோதுகிறது தமிழக அணி.