» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
அணித் தேர்வில் தமிழக வீரர்கள் மீது பிசிசிஐ பாரபட்சம்: பத்ரிநாத் ஆதங்கம்!
புதன் 1, மே 2024 10:02:32 AM (IST)
இந்திய அணியை தேர்வு செய்வதில் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் மீது பாரபட்சம் காட்டுவது ஏன்? என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்கா - மேற்கத்திய தீவுகள் நாடுகளில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியில் ஐபிஎல் போட்டியில் நன்றாக விளையாடி வரும் கே.எல்.ராகுல், ருதுராஜ் கெய்க்வாட், நடராஜன் உள்ளிட்டோருக்கு வாய்ப்பளிக்காமல் பெரியளவில் விளையாடாமல் இருக்கும் ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் இடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்திய அணி தேர்வு குறித்து தனியார் தொலைக்காட்சி நிகழ்வில் பத்ரிநாத் பேசுகையில், "மற்ற வீரர்களைவிட தமிழகத்தை சேர்ந்தவர்கள் அணியில் இடம்பெறுவதற்கு இரண்டு மடங்கு விளையாட வேண்டியது உள்ளது. இது ஏன் என்பது புரியவில்லை. நடராஜன் அணியில் இருந்திருக்க வேண்டும். இந்த சூழலை பலமுறை நான் எதிர்கொண்டுள்ளேன்.
இதனை யாரும் வெளிப்படுத்துவதில்லை என்பதால் நான் பேசுகிறேன். 500 விக்கெட் வீழ்த்திய அஸ்வினை கேள்வி கேட்கிறார்கள். டெஸ்ட் வரலாற்றில் சிறந்த டாப் 5 தொடக்க வீரர்களில் முரளி விஜய் உள்ளார். அவர் இரண்டு போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்றால் கேள்வி கேட்கிறார்கள். இதுகுறித்து கேள்விகள் ஏன் எழவில்லை என்ற ஆதங்கம் இருக்கிறது.” எனத் தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2024 தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வரும் தமிழகத்தை சேர்ந்த நடராஜன், 7 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.