» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

நடராஜன் மிகச்சிறந்த யார்க்கர் பவுலர் : பேட் கம்மின்ஸ் பாராட்டு!

வெள்ளி 3, மே 2024 12:14:52 PM (IST)



ஐதராபாத் அணியின் நடராஜன் மிகச்சிறந்த யார்க்கர் பவுலராக இருக்கிறார் என்று கேப்டன் பேட் கம்மின்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 50வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 76 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் அவேஷ் கான் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 202 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 1 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் திரில் வெற்றி பெற்றது. ஐதராபாத் தரப்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்த வெற்றிக்கு ஐதராபாத் அணியின் நட்சத்திர பவுலர் புவனேஷ்வர் குமார் முக்கிய காரணமாக அமைந்தாலும், மிடில் ஓவர்களில் நடராஜனின் கட்டுக்கோப்பான பவுலிங்கும் முக்கிய காரணமாக அமைந்தது. சிறப்பாக பவுலிங் செய்த நடராஜன் 4 ஓவர்களில் 35 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் பர்பிள் கேப்பையும் நடராஜன் வென்றார்.

இந்நிலையில் இந்த ஆட்டம் முடிந்த பின்னர் ஐதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது, நிச்சயம் இந்த போட்டி அற்புதமான ஒன்றாக அமைந்தது. இதுதான் டி20 கிரிக்கெட். என்ன வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கும். புவனேஷ்வர் குமார் சிறப்பாக கடைசி பந்தை வீசினார். நாங்கள் மிடில் ஓவர்களில் சில விக்கெட்டுகளை எடுக்க முயற்சித்தோம்.

எங்கள் அணியின் நடராஜன் மிகச்சிறந்த யார்க்கர் பவுலராக இருக்கிறார். ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களின் தவறு காரணமாக எங்களுக்கு முக்கியமான விக்கெட்டுகள் கிடைத்தது. இந்த மைதானத்தில் சில போட்டிகளை விளையாடியுள்ளதால், 202 என்ற இலக்கை எளிதாக சேஸ் செய்ய முடியும் என்று நினைத்தேன். எங்கள் பேட்டிங்கில் நிதிஷ் ரெட்டி சிறப்பாக விளையாடினார். பீல்டிங் மற்றும் பவுலிங்கிலும் அவரால் பங்களிக்க முடிவது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

தோல்வி குறித்து சஞ்சு சாம்சன் கருத்து!

போட்டி முடிந்த பின்னர் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அளித்த பேட்டியில் கூறியதாவது, உண்மையிலேயே இந்த போட்டி மிகவும் நெருக்கமாக சென்றது. இந்த சீசன் முழுவதுமே இது போன்ற சில அற்புதமான போட்டிகளை நாங்கள் சந்தித்துள்ளோம். சன்ரைசர்ஸ் அணியின் பவுலர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி மீண்டும் ஆட்டத்திற்குள் வந்து எங்களை தோற்கடித்தனர்.

ஐ.பி.எல் போட்டிகளில் மிகக் குறைந்த மார்ஜினில் நாங்கள் இந்த போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளோம். எப்போதுமே ஒரு போட்டி முழுவதுமாக முடிந்தால் தான் அது முற்றுப்பெறும். இந்த போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் நாங்கள் தோல்வியை தழுவியது ஏமாற்றம் அளிக்கிறது. புதியப்பந்தில் விளையாடுவது சற்று கடினமாக இருந்தது. பின்னர் பந்து பழையதாக மாற மாற பேட்டுக்கு எளிதாக வந்தது.

இந்த போட்டியில் ஜெய்ஸ்வால் மற்றும் ரியான் பராக் ஆகியோர் மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்தனர். ஆனால் பட்லரும், நானும் பவர்பிளேவின் போதே ஆட்டமிழந்ததால் எதிரணி ஆரம்பத்திலேயே உத்வேகத்தை பெற்றது. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors



Arputham Hospital






Thoothukudi Business Directory