» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வேடநத்தம் மாணவி குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் : மரண தண்டனை பெற்றவர் மீது போலீசில் புகார்!

திங்கள் 22, ஜூன் 2026 7:55:50 AM (IST)

வேடநத்தம் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் தரப்பில் இருந்து தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வருவதாக பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். 

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வேடநத்தம் மாணவியின் தந்தை சுப்புராஜ், இவ்வழக்கில் தண்டனை பெற்றுள்ள நபர் தரப்பிலிருந்து தங்களுக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல்களும் நெருக்கடிகளும் வருவதாகக் குளத்தூர் காவல் நிலையத்தில் நேற்று புகார் மனு அளித்துள்ளார்!

தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் பகுதியில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் கடந்த காலங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. வேடநத்தம் மாணவி வன்கொடுமை மற்றும் கொலை வழக்கை விசாரித்த போக்ஸோ நீதிமன்றம், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த மாவீரன் என்கிற தர்ம முனீஸ்வரன் என்பவருக்கு இரட்டை மரண தண்டனையும், ஒரு வருட கடுங்காவல் தண்டனையும் விதித்து அண்மையில் தீர்ப்பளித்தது.

நீதிமன்றத் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, தண்டனை பெற்றுள்ள மாவீரன் என்கிற தர்ம முனீஸ்வரனின் தாயார், தனது வழக்கறிஞரின் துணையுடன் தூத்துக்குடியில் கடந்த ஜூன் 13-ஆம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில், நீதிமன்றத் தீர்ப்பையும், அப்போதைய தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரையும் கடுமையாக விமரிசித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இவ்விவகாரம் தொடர்பாக மாணவியின் தந்தை சுப்புராஜ் குளத்தூர் காவல் நிலையத்தில் அளித்துள்ள மனுவில், "இவ்வாறு நீதிமன்றத் தீர்ப்பையும், காவல் துறையையும் பொதுவெளியில் விமர்சிப்பதன் மூலம் எனக்கும், என் குடும்பத்தினருக்கும் தேவையற்ற வகையில் அச்சுறுத்தல்களும், நெருக்கடிகளும், மன உளைச்சல் ரீதியான தொந்தரவுகளும் தர்ம முனீஸ்வரன் மற்றும் அவரது தாயார் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டு வருகின்றன.

எனவே, சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படும் நபர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள எங்களுடைய குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனுவின் போது வழக்கறிஞர் தாஸ் உடனிருந்தார். இப்புகார் மனுவின் மீது குளத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory