» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: பெண் பலி; 28 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, ஜூன் 2026 9:38:46 AM (IST)
எட்டயபுரம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் பெண் உயிரிழந்தார். மேலும் 28 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள எட்டக்காப்பட்டியைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வட்டம் மேலக்கரந்தை அருகே உள்ள ராசாபட்டியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் புதிதாகத் திறக்கப்பட்டு இயங்கி வந்தது.
நேற்று காலை வழக்கம்போல் இந்த ஆலையில் பட்டாசு உற்பத்தித் தொழில்கள் தொடங்கின. இதற்காகச் சிவகாசியைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் பேருந்துகள் மூலம் வேலைக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். மாலை சுமார் 5.30 மணியளவில், ஆலையின் மருந்து கலவை அறையில் எதிர்பாராத விதமாகப் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
வெடி சத்தம் கேட்டு, ஆலை அறைகளில் இருந்த தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்து நாலாபுறமும் சிதறி ஓடி உயிர் தப்பினர். எனினும், பட்டாசுகள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறிய கோர விபத்தில் ஆலையின் 4 உற்பத்தி அறைகளும் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகிச் சேதமடைந்தன.
விபத்து குறித்துத் தகவல் அறிந்த மாசார்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் கோவில்பட்டி, விளாத்திகுளம், சாத்தூர் ஆகிய ஊர்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் உடனடியாகக் கொண்டு வரப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கியிருந்த தொழிலாளர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர்.
ஆலை இடிபாடுகளில் சிக்கியதில், சாத்தூர் அருகே உள்ள நத்தத்துப்பட்டியைச் சேர்ந்த வெள்ளையப்பன் மனைவி மாரியம்மாள் (48) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், அப்பையநாயக்கன்பட்டி நாராயணசாமி மனைவி முனியம்மாள் (50), ராஜேந்திரன் மனைவி பாக்கியலட்சுமி (46), நத்தத்துப்பட்டி பாண்டி மகன் மாரிமுத்து, அழகுபெருமாள் மனைவி வாழவந்தாள் (40), ராஜேந்திரன் மனைவி சாந்தி (53), பெருமாள் மனைவி ராமு (58), காசிலிங்கபுரம் சங்கிலி மகன் தங்கபாண்டி, சின்னவநாயக்கன்பட்டி காளிமுத்து மகன் ராமர் உட்பட 28 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் முதலுதவி மற்றும் சிகிச்சைக்காகச் சாத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுள் பலத்த காயமடைந்த 3 பேர் மேல்சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
விபத்து குறித்துத் தகவல் அறிந்து எட்டயபுரம் வட்டாட்சியர் சுபா, துணை போலீஸ் சூப்பிரண்டான சுந்தரபாண்டியன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விபத்து நேரிட்ட விதம் குறித்துப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இவ்விபத்து குறித்து மாசார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே கோவில்பட்டி கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விளைநிலங்களுக்கு அருகே பட்டாசு ஆலைகளுக்குப் புதிய அனுமதி வழங்கக் கூடாது என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் சூழ்நிலையில், தற்போது எட்டயபுரம் அருகே புதிதாகத் தொடங்கப்பட்ட பட்டாசு ஆலையிலேயே வெடி விபத்து ஏற்பட்டுள்ளது சுற்றியுள்ள கிராம மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாரத்தில் இரண்டு நாட்கள் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் : நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு அறிவிப்பு!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:34:49 PM (IST)

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையப் போலீசாருக்கு நெல்லை சரக டிஐஜி பாராட்டு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:34:29 PM (IST)

மினி ஜவுளிப் பூங்கா கட்டுமானப் பணிகள் : ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:14:47 PM (IST)

ஒருங்கிணைந்த சேவை மையங்களில் வேலைவாய்ப்பு: ஜூலை 10-க்குள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 4:54:39 PM (IST)

அரசு பணித் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு தொடக்க விழா
செவ்வாய் 23, ஜூன் 2026 4:42:06 PM (IST)

கோவில்பட்டி கல்லூரியில் போக்குவரத்து விதிமுறை குறித்து வழிகாட்டுதல் நிகழ்ச்சி
செவ்வாய் 23, ஜூன் 2026 4:40:07 PM (IST)








