» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மண்ணின் மைந்தன் நான்: தவெக வேட்பாளர் நடிகர் ஸ்ரீநாத் பேட்டி!

புதன் 1, ஏப்ரல் 2026 9:35:41 PM (IST)



தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் நடிகர் ஸ்ரீநாத், இன்று தூத்துக்குடி வருகை தந்து தனது தேர்தல் பிரசார ஆயத்தப் பணிகளைத் தொடங்கினார்.

மதுரையிலிருந்து கார் மூலம் தூத்துக்குடி வந்த ஸ்ரீநாத்திற்கு, புதூர் பாண்டியாபுரம் டோல்கேட் அருகே மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூத்துக்குடி மண்ணுக்கும் தமக்கும் உள்ள உணர்வுப்பூர்வமான பிணைப்பு குறித்துப் பகிர்ந்து கொண்டார்.

வெளியூர் வேட்பாளர் என்ற விமர்சனங்களுக்குப் பதிலளித்த ஸ்ரீநாத்: "நான் வெளியூர் ஆள் கிடையாது; இந்த மண்ணில் பிறந்தவன். எனக்குத் தூத்துக்குடியுடன் மிகப்பெரிய எமோஷனல் கனெக்ஷன் உள்ளது. நான் நினைத்திருந்தால் ஒரு நடிகையைத் திருமணம் செய்திருக்கலாம். ஆனால், நம் ஊர் பெண்ணைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து, தூத்துக்குடி பெண்ணையே கரம் பிடித்தேன். எனது மகளும் இங்குதான் பிறந்தார். எனவே, நான் இந்த ஊரின் மருமகன்," என்றார்.

மேலும், "தூத்துக்குடி எம்பி கனிமொழி எங்கே வசிக்கிறார்? அவருக்கு இது சொந்த ஊரா? அப்படி இருக்கையில் என்னை மட்டும் வெளியூர் ஆள் என்று சொல்வது நியாயமற்றது," எனச் சாடினார். தூத்துக்குடியில் தவெக முக்கிய நிர்வாகியான அஜிதா ஆக்னலுக்குச் சீட் மறுக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, "அது தனிப்பட்ட விஷயம்; அதற்கு கழகத் தலைமைதான் பதில் சொல்ல வேண்டும்," எனச் சுருக்கமாகப் பதிலளித்தார்.

தளபதி விஜய்யைப் போலவே தானும் சினிமாவை விட்டு முழுமையாக வெளியே வந்துவிட்டதாகவும், ஒப்புக்கொண்ட படங்களை முடித்துவிட்டு மக்கள் பணியில் இறங்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். "18 முதல் 85 வயது வரை உள்ளவர்கள் தளபதி பக்கமே உள்ளனர். தூய சக்தியான தவெக, தீய சக்தியான திமுகவை வீழ்த்தி வெற்றி பெறும்," எனத் தன்னம்பிக்கை தெரிவித்தார்.

வரும் ஏப்ரல் 4-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாகத் தெரிவித்தார். தூத்துக்குடியில் தவெக தலைவர் விஜய் விரைவில் பிரமாண்டப் பிரசாரம் மேற்கொள்வார் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆதவ் அர்ஜுனா கூட்டத்தில் கண்ணாடி பாட்டில் வீசப்பட்ட சம்பவத்திற்குத் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்த ஸ்ரீநாத், இது ஒரு அநாகரிகமான செயல் என்றும் குறிப்பிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory