» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆழ்வார்திருநகரி கோயில் மாசித் திருவிழாவில் கருட சேவை : திரளான பக்தர்கள் தரிசனம்

செவ்வாய் 3, மார்ச் 2026 8:17:14 AM (IST)



ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயில் மாசித் திருவிழாவில் கருட சேவை விமரிசையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு கருட சேவை விமரிசையாக நடைபெற்றது. இக்கோயிலின் மாசித் திருவிழா கடந்த பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் ஐந்தாம் நாளான நேற்று, அதிகாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காலை 6:30 மணிக்கு திருமஞ்சனமும், நித்தியல் வழிபாடுகளும் நடைபெற்றன.

காலை 8:00 மணியளவில் நம்மாழ்வார் தோளுக்கினியானில் எழுந்தருளி வீதிப் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் முற்பகல் 10:30 மணிக்குச் சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை மற்றும் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் சாற்றுமுறை ஆகியவை சிறப்பாக நடைபெற்றன. வழிபாட்டிற்குப் பின் பக்தர்களுக்குத் தீர்த்தம், சடாரி மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மாலை 5:00 மணிக்குச் சாயரட்சை வழிபாடு நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை இரவு 7:30 மணியளவில் தொடங்கியது. உற்சவர் பொலிந்து நின்றபிரான் கருட வாகனத்திலும், நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தனர். சுவாமிகள் மாட வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்த நிகழ்வில் கோயில் நிர்வாக அதிகாரி சதீஷ், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

திருவிழாவின் ஒன்பதாம் நாளான வரும் 6-ஆம் தேதி புகழ்பெற்ற தேரோட்டமும், அதனைத் தொடர்ந்து 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளன. இதற்கான சிறப்பான ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகத்தினரும், ஊர் பொதுமக்களும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory