» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 50 ஆண்டுகால பயணிகள் நிழற்குடை இடிப்பு: முன்னாள் மேயர் கண்டனம்; கவுன்சிலர் விளக்கம்

செவ்வாய் 17, பிப்ரவரி 2026 12:58:57 PM (IST)



தூத்துக்குடியில் 50 ஆண்டுகாலமாக பயன்பாட்டிலிருந்த பயணிகள் நிழற்குடை இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, மாநகராட்சி நிர்வாகத்தின் மீது முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சி 5-வது வார்டுக்குட்பட்ட வட்டக்கோவில் பகுதியில், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக எம்.ஜி.ஆர் பயணிகள் நிழற்குடை செயல்பட்டு வந்தது. இதனை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக இடித்து அப்புறப்படுத்தியுள்ளனர். இது குறித்து முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 1965-ம் ஆண்டு இப்பகுதியில் எம்.ஜி.ஆர் மன்றம் தொடங்கப்பட்டு, பின்னர் அது பேருந்து நிறுத்தமாக மாற்றப்பட்டது.

இப்பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தைத் தனிநபர்கள் சிலர் போலிப் பத்திரம் மூலம் அபகரிக்க முயற்சித்தனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகராட்சி ஆணையரிடம் ஏற்கனவே மனு அளித்திருந்தேன். இந்நிலையில், அங்குள்ள பேருந்து நிறுத்தம் மற்றும் அதன் அருகிலிருந்த காமராஜர் சிலை ஆகியவற்றை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியுள்ளது. 

திமுக கவுன்சிலரின் புகாரின் பேரிலேயே அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். இந்த விவகாரம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். மாநகராட்சியின் இந்தச் செயலைக் கண்டித்து அதிமுக சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

கவுன்சிலர் விளக்கம்:

முன்னாள் மேயரின் குற்றச்சாட்டுகள் குறித்து 5-வது வார்டு கவுன்சிலர் அந்தோணி பிரகாஷ் மார்சிலின் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில்: "வட்டக்கோவில் பகுதியில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, சாலை விரிவாக்கப் பணிகளுக்காகவே அந்தப் பேருந்து நிழற்குடை அகற்றப்பட்டது. இதில் எந்தவிதமான அரசியல் காழ்ப்புணர்ச்சியும் கிடையாது. மேயரின் நேரடி ஆய்வுக்குப் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டது. மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை விரிவாக்கப் பணிகள் இதேபோல் நடைபெற்று வருகின்றன" என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory