» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வீட்டில் பதுக்கிய ரூ.10 கோடி போதை பொருள் பறிமுதல் : வாலிபர் கைது!
புதன் 16, அக்டோபர் 2024 5:25:05 PM (IST)
முறப்பநாடு பகுதியில் வீட்டில் பதுக்கிய ரூ.10 கோடி மதிப்பிலான போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா, பீடி இலைகள், விரலி மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் சட்ட விரோதமாக கடத்தி செல்லப்படுவது அடிக்கடி நடந்து வருகிறது. இதைத் தடுக்க மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் முறப்பநாடு பகுதியை சேர்ந்த ராஜபாண்டி மகன் துரைபாண்டி (28) என்பவரது வீட்டில் போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டின் பின் பகுதியில் 3 கிலோ கிரிஸ்டல் மெத்தமைட்டல் என்ற ஐஸ் போதைப்பொருளும், சாரஸ் என்ற போதைப்பொருள் 300 கிலோவும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இவற்றின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.10 கோடி என கூறப்படுகிறது. இதையடுத்து போதை பொருள்களை பறிமுதல் செய்த போலீசார் துரைப்பாண்டியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.