» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 300-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பாதிப்பு : வணிகர் சங்கம் குற்றச்சாட்டு!
வெள்ளி 20, செப்டம்பர் 2024 8:01:01 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை வைத்திருந்ததாக கூறி கடையை சீல் வைத்து பொய் வழக்கு போடுவதால் 300-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது என்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சிறு வணிகர்கள் ஏற்கனவே தொழில் நஷ்டம் காரணமாக பாதிக்கப்பட்டு வியாபாரம் செய்ய முடியாத சூழ்நிலையில் இருக்கும் நேரத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக பழைய வழக்குகளை காரணம் காட்டி சிறு வணிகர்களை ஆறு முதல் 8 மாதங்கள் கழித்து காவல்துறையினர் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் தற்போது புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யாத நிலையில் ரூபாய் 25 ஆயிரம் அபராதம் மற்றும் கடையை பூட்டி சீல் வைக்கும் நிலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட சிறு வணிகர்கள் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு சிறு வணிகர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் தூத்துக்குடி மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் வணிகர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். காவல்துறை மற்றும் உணவு பாதுகாப்புத் துறை பொய் வழக்கு போட்டு வணிகர்களை மிரட்டுவதை கைவிட வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.