» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருவிழாவில் பெண்களிடம் 7 பவுன் தங்க நகை பறிப்பு : மர்ம நபர்கள் கைவரிசை!
புதன் 18, செப்டம்பர் 2024 10:35:17 AM (IST)
தூத்துக்குடி அருகே கோவில் திருவிழாவில் பெண்களிடம் 7 பவுன் தங்க நகைகளை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி அருகே உள்ள குளத்தூர் காளியம்மன் கோவிலில் கொடை விழா நடந்தது. இந்த விழாவில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி 3 பெண்களிடம் மொத்தம் 7 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் பறித்துச் சென்று விட்டனர்.
இதில், குளத்தூர் தெற்கு தெருவை சேர்ந்த முத்துசாமி மனைவி சேது அம்மாள் (75) என்பவரிடமிருந்து 3பவுன், மேல தெருவை சேர்ந்த சண்முகசுந்தரம் மனைவி ஏலத்தாய் (60) என்பவரிடமிருந்து 2 பவுன், செல்லத்துரை மனைவி பெத்தம்மாள் (75) என்பவரிடம் 2பவுன் என மொத்தம் 7பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து 3 பெண்களும் தனித்தனியாக குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முத்துராஜா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.