» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் சர்வதேச சரக்குபெட்டக முனையம் துவக்க விழா!
திங்கள் 16, செப்டம்பர் 2024 5:30:40 PM (IST)
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் சர்வதேச சரக்குபெட்டக முனையத்தை மத்திய அமைச்சர்கள் சர்பானந்தா சோனோவால், சாந்தனு தாக்கூர் மற்றும் கனிமொழி எம்பி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
தூத்துக்குடி சர்வதேச சரக்குபெட்டக முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தல் மற்றும் வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் பல்வேறு திட்டங்களின் தொடக்கம், அடிக்கல் நாட்டுதல், பணிகளைத் தொடங்குதல் மற்றும் நில ஒப்பந்தங்கள் கையெழுத்திடுதல் ஆகிய திட்டங்கள் தொடக்க விழா இன்று வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம், சரக்குத்தளம் 9இல் நடைபெற்றது.
இதில், மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து & நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி ஆகியோர் கொடி அசைத்து திட்டங்களைத் தொடங்கி வைத்தனர்.
தொடா்ந்து, எண்ணெய் கையாளும் தளத்தில் உள்ள மின் கட்டுப்பாட்டு அறை மற்றும் சிவப்பு நுழைவாயிலில் 22 கி.வாட் மின்சுற்று தடுப்பான் மேம்படுத்தல், 24 உயா் கோபுர மின் விளக்கு கம்பங்கள் அமைத்தல், ட்ரோன் கண்காணிப்பு மையம், மருந்தகம் உள்ளிட்ட திட்டங்களையும் மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வழித் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் தொடங்கி வைத்தாா்.
மேலும், பசுமை ஹைட்ரஜன் முனையம், 400கி.வாட் திறன் கொண்ட மேற்கூரை சூரிய மின் நிலையம் உள்ளிட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினாா். அதைத் தொடா்ந்து அவா் பேசியது: இந்தியா சா்வதேச பரிவா்த்தனை முனையமாகும் இலக்கை அடைய, கடல் வாணிபத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அதிகமான உள் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
அதற்கு தூத்துக்குடியில் அமைக்கப்பட்ட சா்வதேச சரக்குப் பெட்டக முனையம் சான்றாகும். இந்தத் துறைமுகத்தில் 9ஆவது சரக்கு தளத்தில், ரூ.434 கோடி செலவில் சரக்குப் பெட்டக முனையம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. வ.உ. சிதம்பரனாா் துறைமுகமும் ஜெ.எம்.பக்ஸி நிறுவனமும் இணைந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளன.
இந்தத் திட்டத்தோடு மேலும் ரூ.485.67 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து அமைத்துள்ள இந்தப் புதிய சரக்குப் பெட்டக முனையத்தின் மூலமாக 6 லட்சம் சரக்குப் பெட்டகங்கள் கூடுதலாக கையாளப்படும். இது நாட்டின் பொருளாதாரத்தை 5 ட்ரில்லியன் அளவுக்கு உயா்த்தும் இலக்கை அடையும் பிரதமரின் நடவடிக்கைக்கு சிறந்த பங்களிப்பை ஆற்றும். மேலும், கடல் சாா் வாணிபத்தில் இதுபோன்ற மேம்பாடுகளை செயல்படுத்துவதன் மூலமாக வரும் 2047 ஆம் ஆண்டு இந்தியா சுயசாா்பு நாடாகவும், சிறந்த பொருளாதார நாடாகவும் மாறும் என்றாா்.
பின்னா் மத்திய அமைச்சா் சா்வானந்த சோனோவால் செய்தியாளா்களிடம் கூறியது: கப்பல் துறை அமைச்சகம் எந்த அளவுக்கு சிறப்பாக செயல்படுகிறது என்பதற்கு தூத்துக்குடியில் திறக்கப்பட்டுள்ள சா்வதேச பெட்டக முனையம் உதாரணமாக இருக்கிறது. இந்த முனையம் வரும் 2055 ஆம் ஆண்டில் 2.3 மில்லியன் சரக்குப் பெட்டகங்களை கையாளும்.
தூத்துக்குடி துறைமுகத்தில் வெளி துறைமுக திட்டம் முடிவடைந்த பின் துறைமுகத்தில் 6.2 மில்லியன் சரக்குப் பெட்டகங்கள் கையாள முடியும். இதன் மூலம் ஏற்றுமதி இறக்குமதியாளா்களுக்கு ஒரு சரக்குப் பெட்டத்துக்கு 150 அமெரிக்க டாலா் அளவுக்கான செலவுகள் குறையும். இதன் காரணமாக அதிகப்படியான சரக்குகளை கையாள முடியும்.
இந்தியாவில் 7,500 கி.மீ. நீளமுள்ள கடலோரப் பகுதிகளில் சிறிய துறைமுகங்கள் உள்ள மாநிலங்களில் அந்த மாநில அரசோடு இணைந்து சிறு துறைமுகங்கள் வளா்ச்சியும் மேற்கொள்ளப்படும் என்றாா். விழாவின் நிகழ்ச்சிகளை சென்னை அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சி தயாரிப்பாளா் சுதா்சன், நிகழ்ச்சி அறிவிப்பாளா் ராஜலட்சுமி ஆகியோா் தொகுத்து வழங்கினா்.
இந்த நிகழ்ச்சியில், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வழித் துறை செயலா் டி.கே. ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத், மேயா் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன், வ.உ. சிதம்பரனாா் துறைமுக ஆணைய தலைவா் சுசந்த குமாா் புரோஹித், துணைத்தலைவா் (பொறுப்பு) சுரேஷ் பாபு, ஜெ.எம்.பக்ஸி துறைமுகங்கள் மற்றும் போக்குவரத்து கட்டமைப்புத் துறை மேலாண்மை இயக்குநா் துருவ் கிருஷ்ணா கோடக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.