» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
முத்ரா கடன் மானிய தொகை வழங்க மறுக்கும் மத்திய கூட்டுறவு வங்கி: புதூர் மக்கள் புகார்
திங்கள் 16, செப்டம்பர் 2024 4:52:54 PM (IST)
புதூரில் முத்ரா லோன் வாங்கி திரும்ப கட்டிய 40 பேருக்கு, மானியம் தலா ரூ. 10 ஆயிரம் வழங்க தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாகம் மறுப்பதாக புதூர் மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இது குறித்து புதூர் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் கடன் வாங்கிய நெசவாளர்கள் 16.09.24 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது; தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் புதூர் பேரூராட்சி பகுதியில் வசித்து வரும் நெசவாளர்களாகிய நாங்கள் 40 பேரும் புதூர் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் முத்ரா லோன் 2019ம் ஆண்டு வாங்கியுள்ளோம்.
இதில் 1 நபருக்கு ரூபாய் 50 ஆயிரம் முத்ரா லோன் கொடுத்திருந்தனர். அதில் ரூபாய் 10 ஆயிரம் மானியம் தருவதாக வங்கி தரப்பில் கூறினர். ஆனால் வங்கியில் சொன்னபடி மானியம் ரூ.10 ஆயிரம் தரவில்லை. கடன் வாங்கிய நாங்கள் 40 பேரும் குறிப்பிட்டபடி கடனை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கட்டி முடித்து விட்ட நிலையில், மானியத் தொகை ரூபாய் 10 ஆயிரம் எங்களுக்கு இதுவரை தரப்படவில்லை. நாங்களும் பலதடவை புதூர் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் கேட்டுப்பார்த்தோம் ஆனால் அவர்கள் எங்களை பலமுறை அலயவைத்தனர்.
பின்னர் பல்வேறு முயற்சிகளுக்கு பின்னர் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் போய் கேட்கச் சொன்னதையடுத்து; தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் முறையிட்டும் எந்த பதிலும் இல்லாத நிலையில் மீண்டும் மீண்டும் எங்களை அலைக்கழித்து வருகின்றனர். நெசவாளர்களாகிய நாங்கள் 40 பேரும் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருந்து வருகிறோம்.
எங்களுக்கு தொழில் சரியாக இல்லை, மிகவும் நலிவுற்ற நிலையில் உள்ளோம். மாவட்ட ஆட்சியர் எங்களுக்கு வரவேண்டிய மானியத் தொகை ரூபாய் 10 ஆயிரத்தை வங்கியிடம் இருந்து விரைந்து பெற்றுத்தரும் படி கேட்டுக் கொள்வதாக மனுவில் தெரிவித்துள்ளனர். இதில் சித்ரா கணேசன், முத்துமாரி, அம்பிகாவதி, அமிர்த கல்யாணி, வசந்தா, கஸ்தூரி, நாகரத்தினம், ஜோத ஈஸ்வரி, சந்திரா மணி, சித்ரா, சாந்தி, செந்தில் மணி, சந்திரா, ஜோதிலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.