» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
பேஷ்பால் யுக்திக்கு இந்திய அணி பதிலடி கொடுக்க வேண்டும்: ராகுல் டிராவிட்
ஞாயிறு 28, ஜனவரி 2024 9:27:30 PM (IST)
இங்கிலாந்தின் பேஷ்பால் யுக்திக்கு பதிலடி கொடுத்தால்தான் இந்திய அணியால் இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட முடியும் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தைக் காட்டிலும் 190 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையிலும், இந்திய அணி தோல்வியைத் தழுவியுள்ளது. 231 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 202 ரன்களுக்கே ஆட்டமிழந்தது.
இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: எந்த இடத்தில் தவறு ஏற்பட்டது என்பதை சுட்டிக்காட்டுவது மிகவும் கடினமாக உள்ளது. 230 ரன்கள் என்பது அடையக் கூடிய இலக்கு என நினைத்தேன். ஆனால், எங்களால் அந்த இலக்கை அடைய முடியவில்லை. இங்கிலாந்து அணியின் ஆலி போப் சிறப்பாக விளையாடினார். வெற்றி இலக்கை அடைவதற்கு ஏற்றவாறு நாங்கள் பேட்டிங் செய்யவில்லை. இந்திய அணியின் பின்வரிசை ஆட்டக்காரர்கள் முன்வரிசை ஆட்டக்காரர்களை விட நன்றாக விளையாடினார்கள் என்றார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது: இங்கிலாந்தின் பேஷ்பால் யுக்திக்கு நாம் பதிலடி கொடுக்க வேண்டியிருக்கும். தரமான பந்துவீச்சாளர்களுக்கு எதிராக பலமுறை தொடர்ச்சியாக ஸ்வீப் ஷாட்டுகள் விளையாடியதை இதற்கு முன் பார்த்ததில்லை. இதற்கு முன்பு விளையாடியவர்கள் இதுபோன்று வித்தியாசமான யுக்திகளை எப்போதாவது பயன்படுத்தி சிறப்பான இன்னிங்ஸ்களை விளையாடுவார்கள்.
ஆனால், இந்த யுக்தியை தொடர்ச்சியாக தவறுகள் எதுவும் செய்யாமல் விளையாடுவது புதிதாக உள்ளது. ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டுகளை பலமுறை விளையாடி பந்துவீச்சாளர்களுக்கு ஆலி போப் அழுத்தத்தை ஏற்படுத்தினார். ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டுகள் விளையாடப்படுவதை கடந்த காலங்களில் பல போட்டிகளில் பார்த்திருக்கிறோம். தொடர்ச்சியாக அதுவும் வெற்றிகரமாக விளையாடுவது கடினமான ஒன்று.
அதனை ஆலி போப் சிறப்பாக செயல்படுத்தினார். இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் இது போன்ற சவாலை முதல் முறையாக சந்திக்கவில்லை. இதனை எப்படி திறம்பட எதிர்கொள்ள வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக திட்டமிட்டு அடுத்தடுத்தப் போட்டிகளில் இங்கிலாந்து வீரர்களுக்கு நெருக்கடி அளிக்க வேண்டும் என்றார்.