» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மடப்புரம் அஜித்குமார் மரண வழக்கு: சி.பி.ஐ. பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு!

புதன் 22, ஏப்ரல் 2026 4:55:41 PM (IST)

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் அஜித்குமார் மரண வழக்கில், தன் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி காவல் ஆய்வாளர் தாக்கல் செய்த மனு மீது சி.பி.ஐ. பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளியான அஜித்குமார், கடந்த 2025 ஜூன் 27-ஆம் தேதி நகை திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணக்குப் பின் அவர் உயிரிழந்த நிலையில், இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில், திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் உட்பட மேலும் 4 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டன.

தற்போது மதுரை உயர்நீதிமன்றத்தில் ஆய்வாளர் ரமேஷ்குமார் தாக்கல் செய்துள்ள மனுவில் "அஜித்குமாரிடம் விசாரணை நடத்திய பிறகு அவர் வெளியே சென்றார். அதன் பின் சிறப்பு விசாரணைக் குழுவினர்தான் அவரை அழைத்துச் சென்றனர். "சிறப்பு விசாரணைக் குழுவினர் தாக்கியதாலேயே அவர் உயிரிழந்தார். 

ஆனால், சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள கூடுதல் குற்றப்பத்திரிகையில் தேவையின்றி எனது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. போலியான ஆவணங்கள் அடிப்படையில் என் மீது சுமத்தப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய வேண்டும்." என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி, ஆய்வாளர் ரமேஷ்குமாரின் மனு குறித்து சி.பி.ஐ. துணை காவல் கண்காணிப்பாளர் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

மடப்புரம் அஜித்குமார் மரண வழக்கில் தன் பெயரைச் சேர்த்த சி.பி.ஐ-யின் குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி ஆய்வாளர் ரமேஷ்குமார் மனு தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக சி.பி.ஐ. பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory