» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குமரி வெங்கடாஜலபதி கோவிலில் தெலுங்கு வருடப்பிறப்பு விழா: திரளான பக்தர்கள் தரிசனம்

வியாழன் 19, மார்ச் 2026 12:54:33 PM (IST)



கன்னியாகுமரி விவேகானந்தபுரம் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்குப் பாத்தியப்பட்ட வெங்கடாஜலபதி கோவிலில், தெலுங்கு வருடப்பிறப்பு விழா இன்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

விழாவை முன்னிட்டு, இன்று அதிகாலை சுப்ரபாத சேவையுடன் கோவில் நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வெங்கடாஜலபதிக்கு பூலங்கி சேவை, விசேஷ பூஜைகள் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர், அர்ச்சகர்கள் புதிய ஆண்டிற்கான பஞ்சாங்கத்தை வாசித்தனர்.

இதனைத் தொடர்ந்து, சுவாமிக்கு மங்களப் பொருட்களைப் படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் அர்ச்சகர்கள் மற்றும் நிர்வாகிகள் பூஜை பொருட்களைத் தலையில் சுமந்தபடி, மேளதாளங்கள் முழங்கக் கோவில் வெளிப்பிரகாரத்தைச் சுற்றி ஊர்வலமாக வந்தனர். பின்னர் அந்தப் பொருட்கள் வெங்கடாஜலபதி முன்பு படைக்கப்பட்டுச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன.

மேலும், கோவிலில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி, கருட பகவான், பத்மாவதி தாயார் மற்றும் ஆண்டாள் ஆகிய தெய்வங்களுக்கும் விசேஷ பூஜைகள் நடைபெற்றன. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மாலை 5 மணிக்குத் தோமாலை சேவையும், இரவு 8 மணிக்கு ஏகாந்த சேவையும் நடைபெற உள்ளன. இதனைத் தொடர்ந்து, பெருமாள் பள்ளியறைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியுடன் இன்றைய விழா நிறைவடையும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital






Thoothukudi Business Directory