» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கடன் தொல்லையால் விபரீத முடிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!

புதன் 18, மார்ச் 2026 10:26:15 AM (IST)

திசையன்விளை அருகே, கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தம்பதி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் காருடன் தீவைத்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள பெட்டைகுளம் கிராமத்திலிருந்து ஆத்தங்கரை பள்ளிவாசல் செல்லும் சாலையில், ஒதுக்குப்புறமான காட்டுப்பகுதியில் கார் ஒன்று முற்றிலும் எரிந்த நிலையில் கிடப்பதாக நேற்று காலை போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காரைப் பரிசோதித்தபோது, உள்ளே நான்கு பேர் உடல் கருகி எலும்புக்கூடுகளாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடல்கள் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காகப் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

காரின் எஞ்சின் எண்ணை வைத்துப் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், உயிரிழந்தவர்கள் சென்னையைச் சேர்ந்த முகம்மது ரபி (கார் ஷோரூம் ஊழியர்), அவரது மனைவி நஸ்ரின் பாத்திமா, மகள் அப்ரின் பாத்திமா (15), மகன் முகம்மது காஜா (13) என்பது தெரியவந்தது.

சென்னையின் நந்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த முகம்மது ரபிக்கு கடும் கடன் தொல்லை இருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்காகத் தனது வீட்டையும் விற்றுள்ளார். இருப்பினும் கடன் சுமை குறையாததால், குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து கடந்த 13-ம் தேதி சென்னைப்பகுதியிலிருந்து காரில் ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு வந்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு, காட்டுப்பகுதிக்குக் காரைச் செலுத்திய ரபி, காரின் கதவுகளை உட்புறமாகப் பூட்டிவிட்டு, ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பெட்ரோலைத் தன் மீதும், குடும்பத்தினர் மீதும் ஊற்றித் தீ வைத்துள்ளார். இதில் நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

போலீசார் காரைத் திறந்து பார்த்தபோது, பின் இருக்கையில் இரண்டு குழந்தைகளும் தங்களது தாயைக் கட்டியணைத்தபடி எலும்புக்கூடுகளாகக் கிடந்த காட்சி பார்ப்பவர்களைக் கண் கலங்கச் செய்தது. இச்சம்பவம் குறித்து திசையன்விளை போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து

SivasriMar 18, 2026 - 12:06:56 PM | Posted IP 172.7*****

மனிதம் செத்து போச்சு தயவு செய்து இந்த முடிவுக்கு வராதீங்க உங்கள் குழந்தைகள் என்ன பாவம் செய்தது.கடன் தொல்லை இருக்கலாம் வாழ்ந்து காட்டனும்.ஊர்விட்டு வந்து பிழைத்து கொள்ளலாம்.கடன் கொடுத்தவர் நிம்மதியா.பொறுமையாக இருந்து வாங்கலாம்.அதான் மனிதம் செத்து போச்சு.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital




Thoothukudi Business Directory