» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மானாமதுரை விசாரணை கைதி மரண வழக்கு: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு டி.ஜி.பி. உத்தரவு

செவ்வாய் 10, மார்ச் 2026 8:11:37 PM (IST)

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கைதான விசாரணை கைதி ஆகாஷ் மரணமடைந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றம் செய்து தமிழக டி.ஜி.பி. வெங்கட்ராமன் உத்தரவிட்டுள்ளார்.

மானாமதுரை சீயோன் நகரைச் சேர்ந்த ஜெயக்குமார் (37), அழகர் (36) ஆகிய இருவரை மர்ம நபர்கள் ஆயுதங்களால் வெட்டினர். இது தொடர்பாக மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சீயோன் நகரைச் சேர்ந்த ஆகாஷ் (எ) டெலிசன் (24) உட்பட இருவரைக் கைது செய்தனர்.

கைது நடவடிக்கையின் போது ஆகாஷ் போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்று பாலத்திலிருந்து குதித்ததாகவும், அதில் அவரது கால் எலும்பு முறிந்ததாகவும் கூறப்படுகிறது. காயமடைந்த ஆகாஷ் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் திடீரென உயிரிழந்தார்.

ஆகாஷின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மானாமதுரை நான்கு வழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். "ஆகாஷின் மரணத்திற்குப் பொறுப்பான போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்" என அவர்கள் வலியுறுத்தினர். மேலும், மதுரை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யச் சம்மதிக்காமல் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

விசாரணை கைதி மரணமடைந்ததால், இது குறித்து மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்தப்பட்டது. மதுரை அரசு மருத்துவமனை போலீசார், 196 பி.என்.எஸ்.எஸ். (BNSS) பிரிவின் கீழ் (காவல்துறை விசாரணையில் இருக்கும் நபர் உயிரிழத்தல்) வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், இவ்வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி, இதனை சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றம் செய்து தமிழக டி.ஜி.பி. உத்தரவிட்டார். இதற்கான ஆவணங்கள் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, தற்போது முதற்கட்ட விசாரணை தொடங்கியுள்ளது.

இதற்கிடையே, உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஆகாஷின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்ய அவரது பெற்றோர் நேற்று மாலை ஒப்புதல் அளித்தனர். நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளின்படி, மருத்துவர்கள் குழுவினர் பிரேதப் பரிசோதனையை மேற்கொண்டனர். முழுமையான விசாரணை அறிக்கை வெளியான பின்னரே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory