» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி தலைவர் யுவராஜா ராஜினாமா
திங்கள் 22, ஜூலை 2024 12:06:37 PM (IST)
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜா தனது பதவியை ராஜினாமா யுவராஜா செய்துள்ளார்.
இதுதொடர்பாகஅவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் சென்னையில் ஜூன் 22, 2024 தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் எதிர்காலம் மற்றும் வளர்ச்சி குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கட்சியின் அனைத்து மட்டத்திலும் மறு சீரமைப்பு செய்ய முடிவு மேற்கொள்ளப்பட்டது.
நான் கடந்த 10 ஆண்டு காலமாக இளைஞர் அணி மாநில தலைவராக செயல்பட்டு வந்துள்ளேன். அடுத்த தலைமுறைக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக என்னுடைய மாநிலத் தலைவர் பதவியை கடந்த ஜூலை 16, 2024ஆம் தேதி திரு.ஜி.கே வாசன் அவர்களை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினேன். தொடர்ந்து இயக்கத்தின் வளர்ச்சிக்காக தலைவர் திரு.ஜி.கே வாசன் அவர்களின் தலைமையின் கீழ் பயணிப்பேன்.
அரசியலில் கடந்த 15 ஆண்டு காலமாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவராக திரு.ஜி.கே வாசன் அவர்களின் ஆதரவோடு இரண்டு முறை 2009 மற்றும் 2012 ல் நடைபெற்ற உட்கட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். பிறகு 2014இல் தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி மாநில தலைவராக 10 ஆண்டு காலம் செயல்பட்டு வந்துள்ளேன். கடந்த 15 ஆண்டு காலமாக இளைஞர் அணி செயல்பாட்டில் முழுவதுமாக என்னை ஈடுபடுத்தி கொண்டேன். கட்சிக்குள் ஒரு மாற்றத்தை கொண்டு வரும் நோக்கில் தமாகா தலைவர் திரு.ஜி.கே வாசன் அவர்கள் எடுக்கக்கூடிய முடிவுக்கு முன் மாதிரியாக இந்த ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளேன். இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் இருந்தபோதும் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தார். யுவராஜா, ஜி.கே.வாசனின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்டார். காங்கிரஸ் சார்பில் 2011 தேர்தலில் ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஜி.கே.வாசன் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து தனியாக தமிழ் மாநில காங்கிரஸை தொடங்கிய நிலையில், யுவராஜாவும் அவருக்கு ஆதரவாக காங்கிரஸில் இருந்து விலகி தமாகாவில் இணைந்தார். மூத்த தலைவர்கள் பலரும் கட்சியை விட்டு பிரிந்து சென்ற நிலையிலும் யுவராஜா தமாகாவிலேயே தொடர்ந்து பயணித்தார்.
கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமாகா கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட யுவராஜா, 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைடைந்தார். ஆனாலும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தமாகாவுக்கு சீட் ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.