» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நெல்லை தம்பதியிடம் 15 பவுன் நகை பறிப்பு: தானே ரயில் நிலையத்தில் துணிகரம்!

புதன் 1, ஏப்ரல் 2026 8:35:50 AM (IST)

மும்பையில் இருந்து இரயில் மூலம் சொந்த ஊருக்குப் புறப்பட்ட நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியினரிடம், கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மர்ம நபர் 15 பவுன் தங்க நகைகளைப் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா, திருமலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாசானமுத்து (59). இவரது மனைவி பகவதி (56). இவர்கள் தற்போது நவிமும்பை, ஐரோலி செக்டர்-15 பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு, இந்தத் தம்பதியினர் மும்பை சி.எஸ்.எம்.டி  நிலையத்திலிருந்து நாகர்கோவில் செல்லும் விரைவு இரயிலில் ஏறித் தங்களது சொந்த ஊருக்குப் புறப்படத் தயாராகினர்.

இரவு 9 மணியளவில், அவர்கள் தானே  இரயில் நிலையத்தில் 7-வது நடைமேடையில் இரயிலுக்காகக் காத்திருந்தனர். அப்போது அங்கு பயணிகள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. நாகர்கோவில் இரயில் வந்தடைந்ததும், தம்பதியினர் கூட்ட நெரிசலில் இரயிலில் ஏற முயன்றனர்.

இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர் ஒருவர், பகவதியின் கையில் இருந்த கைப்பையைத்  திடீரெனப் பறித்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி ஓடினார். கூட்ட நெரிசல் காரணமாகப் பறி கொடுத்த பகவதியால் அந்த நபரை உடனடியாக அடையாளம் காணவோ அல்லது தடுக்கவோ முடியாமல் போனது.

பறிபோன அந்தப் பையில் சுமார் ரூபாய் 17 லட்சம் மதிப்பிலான 15 பவுன் தங்க நகைகள், ஒரு விலையுயர்ந்த செல்போன் மற்றும் ரொக்கப் பணம் ரூபாய் 18,000 இருந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து மாசானமுத்து இரயில்வே காவல்துறையிடம் புகார் அளித்தார். 

புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப் பதிவு செய்து, இரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். திட்டமிட்டே இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், தப்பியோடிய நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory