» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்ரீவைகுண்டம் தொகுதி: காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் நீடிக்கும் இழுபறி!

புதன் 1, ஏப்ரல் 2026 7:48:48 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளரை அறிவிப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருவது, திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொகுதியில் நாம் தமிழர் கட்சி, புதிய மக்கள் தமிழ் தேசம் கட்சி மற்றும் நாம் இந்தியர் கட்சி வேட்பாளர்கள் ஏற்கனவே தங்களது மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

மற்றொரு புறம், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்டச் செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதன், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் அன்னை வி.ஜி. சரவணன், புதிய தமிழகம் கட்சி சார்பில் தெற்கு மாவட்டச் செயலாளர் ராஜா சுதன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு, களப்பணிகளைத் தீவிரமாகத் தொடங்கிவிட்டனர்.

காங்கிரஸ் தரப்பில் தாமதம் ஏன்?

திமுக கூட்டணியில் இத்தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 தேர்தலில் வெற்றி பெற்ற ஊர்வசி எஸ். அமிர்தராஜ், மீண்டும் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறார். தொகுதி மக்களிடையே நன்கு அறிமுகமான அவருக்கு மீண்டும் வாய்ப்பளித்தால் வெற்றி உறுதி என ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். அதேவேளையில், புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என மற்றொரு தரப்பினர் தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருவதால் வேட்பாளர் தேர்வில் சிக்கல் நீடிக்கிறது.

மேலும், ராகுல் காந்தி தற்போது கேரள மாநிலத் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால், தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை இறுதி செய்வதில் காலதாமதம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ், அதிமுக, தவெக, நாதக, புதிய தமிழகம் என ஐந்துமுனைப் போட்டி நிலவுகிறது. மற்ற கட்சிகள் பிரசாரத்தில் முன்னிலை பெற்று வரும் நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படாதது கூட்டணிக் கட்சியினரைச் சோர்வடையச் செய்துள்ளது.

"ஒவ்வொரு நாள் தாமதமும் எங்களைப் பிரசாரத்தில் பின்தங்கச் செய்யும். எனவே, காங்கிரஸ் தலைமை உடனடியாக வேட்பாளரை அறிவிக்க வேண்டும்" என அக்கூட்டணியினர் வலியுறுத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory