» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழக பட்ஜெட்டில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு திட்டங்கள் பட்டியல்!
சனி 15, மார்ச் 2025 8:41:34 AM (IST)
தமிழ்நாடு அரசின் 2025- 2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.
தமிழ்நாடு அரசின் 2025- 2026-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தூத்துக்குடி மாவட்டத்துக்கான பல்வேறு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன் விபரம் வருமாறு:-
தூத்துக்குடி மாவட்டம் பட்டணமருதூரில் தமிழக தொல்லியல் துறை சார்பில் அழகாய்வு மேற்கொள்ளப்படும். ஓட்டப்பிடாரத்தில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 639 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் ரூ.370 கோடி மதிப்பீட்டில் 1.3 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் மேற்கொள்ளப்படும்.
மூத்த குடிமக்களின் முழுமையான பராமரிப்புக்காக தூத்துக்குடி மாநகராட்சியில் அன்புச்சோலை மையம் அமைக்கப்படும். தூத்துக்குடி மாவட்டம் ஏற்கெனவே பசுமை ஹைட்ரஜன் மற்றும் வாகன உற்பத்தித் துறையில் கணிசமான முதலீடுகளை ஈர்த்துள்ளதை தொடர்ந்து, இந்த மாவட்டத்தில் ஒரு செயற்கை இழை மற்றும் தொழிநுட்ப ஜவுளித் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.
கடல் நீரின் தரம், சுற்றுச்சூழல் கல்வி, பொது சுற்றுச்சூழல் மேலாண்மை, பாதுகாப்பு மற்றும் சேவைகள் ஆகிய நான்கு பெரும் பிரிவுகளின் கீழ் உள்ள 33 வெவ்வேறு தகுதிகளைக் கொண்டிருக்கும் கடற்கரைகளுக்கு வழங்கப்படும் நீலக்கொடி சான்றினை 2025-2026 ஆம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினம், கடற்கரை பெற்றிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை புரியும் திருச்செந்தூர் பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் உரிய கட்டமைப்பு வசதிகளை நவீன தரத்துடன் அமைத்திடும் நோக்கோடு பணிகள் மேற்கொள்ளப்படும். பல்வேறு அரசுத் துறைகள் மூலமாக மேற்கொள்ளப்படும் இப்பணிகளை ஒருங்கிணைத்து முறையாகச் செயல்படுத்திட திருச்செந்தூர் நகருக்கென தனி வளர்ச்சி ஆணையம் உருவாக்கப்படும்.
'தமிழ்நாடு கடல் போக்குவரத்து உற்பத்திக் கொள்கை 2025' ஒன்றை அரசு அறிமுகப்படுத்தும். கப்பல் மற்றும் படகு வடிவமைப்பு மற்றும் கப்பல் சட்டகம் கட்டுருவாக்கம் மற்றும் கப்பல் எந்திர உற்பத்தி ஆகிய துறைகளில் முதலீடு மற்றும் புத்தாக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கங்களைக் கொண்டு இந்த புதிய கொள்கை அமைந்திடும். இந்தத் தொழிலின் வருகையின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். மேலும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை வளர்ச்சிக்கும் இந்த கொள்கை வித்திடும்.
சமூக பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த கடலோர உள் கட்டமைப்புகளுக்கு, பருவ நிலை மாற்றங்களால் ஏற்படும் கடலரிப்பு போன்ற பாதிப்புகளை தணித்திடவும், புதிய திட்டங்களை வகுத்திடவும் உடனடி, இடைக்கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் மூலம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் இயக்குநரகத்தின் ஒருங்கிணைப்புடன், கடலோர பாதுகாப்புடன் கூடிய மேம்பாட்டுக்கான ஆய்வு மேற்கொண்டு அதற்கான திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
புராதனக் கட்டடங்களை பழமை மாறாமல் புதுப்பிக்கும் நோக்கோடு, தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் நகரில் உள்ள மகாகவி பாரதியார் இல்லம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்.வெப்ப அலையால் ஏற்படும் சுகாதார பாதிப்பு மற்றும் உற்பத்தித் திறன் இழப்பினைக் குறைப்பதற்கான தணிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தூத்துக்குடி நகரத்துக்கென தனியே வெப்ப அலை செயல்திட்டம் தயாரிக்கப்படும்.
மேலும், மீனவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மீன் இறங்கு தளம், மீன்பிடி வலை பின்னுதல் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் செயல்படுத்தப்படும். மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.8 ஆயிரம் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஓடும் பஸ்சில் பிக் பாக்கெட்: 2 பெண்கள் கைது
சனி 15, மார்ச் 2025 8:17:29 PM (IST)

நகைக்கடை அதிபர் மகனை கடத்தி கொலை செய்ய திட்டம் : தூத்துக்குடியைச் சேர்ந்த 5 பேர் கைது
சனி 15, மார்ச் 2025 8:12:56 PM (IST)

புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட அரசாணை : எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்த கோரிக்கை!!
சனி 15, மார்ச் 2025 7:55:53 PM (IST)

சர்வதேச திரைப்பட விழாவில் முதலிடத்தை வென்ற திரு குறும்பட குழுவினருக்கு மேயர் வாழ்த்து
சனி 15, மார்ச் 2025 7:50:21 PM (IST)

மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.77.41 லட்சம் நலத்திட்ட உதவிகள் : ஆட்சியர் க.இளம்பகவத் வழங்கினார்
சனி 15, மார்ச் 2025 4:23:44 PM (IST)

தூத்துக்குடி சிக்னல் பகுதியில் மேற்கூரை : மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
சனி 15, மார்ச் 2025 4:16:33 PM (IST)

HasanMar 15, 2025 - 02:38:47 PM | Posted IP 162.1*****