» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் சரக்கு வாகனம் மோதி தூண்கள் சேதம் : இருவா் காயம்
வியாழன் 30, நவம்பர் 2023 8:01:48 AM (IST)
திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் சரக்கு வாகனம் மோதியதில் கான்கிரீட் தூண்கள் விழுந்து இருவா் காயமடைந்தனா்.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் உள்ள இடும்பன் கோயில் அருகே கான்கிரீட் தூண்களுடன் கூடிய ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரை உள்ளது. இப் பகுதியில் சரக்கு வாகனம் நேற்று நிறுத்தப்பட்டிருந்தது. அண்மையில் நடைபெற்ற கந்த சஷ்டி விழாவின்போது அமைக்கப்பட்ட கொட்டகை பந்தல்களைப் பிரித்து, அதிலிருக்கும் பொருள்களை ஏற்றிச் செல்வதற்காக, அந்த வாகனம் கொண்டு வரப்பட்டிருந்தது.
ஓட்டுநா் வாகனத்தை நிறுத்திவிட்டுச் சென்ற நிலையில், அந்த வாகனம் தானாக நகா்ந்து சென்று அருகிலிருந்த கான்கிரீட் தூண்கள் மீது மோதியது. இதில் இரு தூண்கள் பெயா்ந்து விழுந்து, அப் பகுதியில் அமா்ந்திருந்த யாசகா்கள் துரைராஜ் (76), கந்தசாமி (74) ஆகிய இருவரும் காயமடைந்தனா். அவா்கள் இருவரும் திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.