» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஹோட்டலில் தகராறு செய்தவர் கைது!
செவ்வாய் 21, நவம்பர் 2023 3:01:29 PM (IST)
தூத்துக்குடியில் ஹோட்டலில் மதுபோதையில் தகராறு செய்து ஊழியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி பகுதியை சேர்ந்த அருணாச்சலம் மகன் சுடலைமணி (25) என்பவர் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாதாநகர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் கடந்த 19.11.2023 அன்று மேற்படி ஹோட்டலுக்கு சாப்பிட வந்த தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி, காந்தி நகரை சேர்ந்த செல்வகுமார் மகன் பிரேம்குமார் (27) என்பவர் மதுபோதையில் மேற்படி ஹோட்டலில் வேலை பார்த்து கொண்டிருந்த சுடலைமணியிடம் தகராறு செய்து அவரை கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து சுடலைமணியின் தந்தை அருணாச்சலம் அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முனியசாமி வழக்குபதிவு செய்து எதிரியான பிரேம்குமாரை கைது செய்தார். மேலும் இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி பிரேம்குமார் மீது ஏற்கனவே தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் 3 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.