» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கிராமசபை கூட்டத்தில் பெண்கள் திடீர் போராட்டம்
வியாழன் 23, மார்ச் 2023 7:35:48 AM (IST)
கயத்தாறு அருகே சிறப்பு கிராம சபை கூட்டத்தில், புதிய கல்குவாரி அமைப்பற்கு தடை விதித்து தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி பெண்கள் திடீரென போராட்டம் நடத்தினர்.
கயத்தாறு யூனியன் அய்யனாரூத்து கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உலக தண்ணீர் தினம் சிறப்பு கிராம சபை கூட்டம் பஞ்சாயத்து தலைவர் சண்முகையா தலைமையில் நேற்று நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் அய்யனார் வரவேற்றார். துணைத் தலைவர் பாத்திமா பீவி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பரமன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 228 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் புதியதாக அய்யனாரூத்து கிராமத்தின் பகுதியில் கல்குவாரிகள் அமைப்பதை தடை செய்ய வேண்டும், அதற்கு கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், அதனை மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழக அரசுக்கு அனுப்ப வேண்டும் என கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் மகளிர் குழுக்கள் கோரிக்கையை வைத்தனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டதை தொடர்ந்து கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டோணிதீலீப் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் பஞ்சாயத்து நிர்வாகம் அந்த தீர்மானத்தை மட்டும் நிறைவேற்றாமல் இருந்ததால், கல்குவாரி வேண்டாம் என 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கோஷங்களை எழுப்பி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது. பின்னர் கயத்தாறு யூனியன் அலுவலகத்தில் இருந்து வட்டார வளர்ச்சி அலுவலர் (பொறுப்பு) செய்யது பாபுலால் வந்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் பேசியதை தொடர்ந்து, புதிதாக கல்குவாரிகள் அமைப்பதற்கு தடை விதிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை ஊராட்சி செயலர் வாசித்த பின்னரே பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.