» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீடு உள்பட 4 இடங்களில் நகை-பணம் கொள்ளை
புதன் 22, மார்ச் 2023 7:59:05 AM (IST)
நெல்லை அருகே ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேரின் வீடுகளில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
நெல்லை அருகே உள்ள இட்டேரி கோல்டன் சிட்டி பகுதியை சேர்ந்தவர் வேல்குமார் (60). இவர் நெல்லை மாநகர போலீசில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது தாயார் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டதால் தனது சொந்த ஊரான களக்காட்டிற்கு சென்றார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டுக்கு திரும்பி வந்த போது, வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த சுமார் ரூ.10 ஆயிரத்தை மாம்நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
அதேபோல் பக்கத்து வீட்டில் வசிக்கும் கூலி தொழிலாளியான இசக்கிதாஸ் குடும்பத்துடன் வெளியூருக்கு சென்று இருந்தார். திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த சுமார் ரூ.21 ஆயிரம் மதிப்புள்ள தங்க மோதிரம், வெள்ளி குத்துவிளக்கு ஆகியவற்றையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. மேலும் அதே பகுதியில் வசிக்கும் முத்துலட்சுமி (45), நாகர்கோவிலில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் தனது கணவரை பார்ப்பதற்காக கடந்த 17-ந் தேதி சென்றார். நேற்று முன்தினம் அவர் வீட்டுக்கு திரும்பி வந்த போது அவரது வீட்டின் பின்பக்க கிரில்கேட், மரக்கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 9 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.4 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இந்த 3 சம்பவங்கள் குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். மேலும் மர்ம நபர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டு உள்ளது. இதுதவிர நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டான் ராஜபதி பகுதியை சேர்ந்த வக்கீல் சுடலை (29) என்பவர் வீட்டில் புகுந்த மர்மநபர் வீட்டில் இருந்த சுமார் ரூ.3 ஆயிரத்து 500 மதிப்புள்ள வெள்ளி விளக்கை திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.