» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.15 கோடி மோசடி : இணைப் பதிவாளர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
புதன் 18, மே 2022 3:45:30 PM (IST)
பழையகாயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.15 கோடி முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் குணசேகரன் தலைமையில், வழக்கறிஞர் யு.எஸ்.சேகர், சிஐடியூ பொன்ராஜ் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் கூட்டுறவு சங்க இணைப் பதிவாளரிடம் அளித்த மனு: பழையகாயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் ஜெயசங்கர் தனது பதவியை பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளார். இதனால் தமிழக அரசுக்கு ரூ.15கோடிக்கு மேல் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. துணைப் பதிவாளர் ரவீந்திரன் மற்றும் அதிகாரிகள் சங்கத் தலைவரின் மோசடியை மூடி மறைக்க முயறசி செய்து வருகிறார்கள்.
முறைகேடுகள் நடைபெறுவதற்கு முழுமையான உதவி புரிந்து அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்த காரணமான துணைப் பதிவாளர், நிர்வாக பொறுப்பில் தொடரும் வரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைப்பதற்கு தடையாக இருக்கும். மேலும், துணைப் பதிவாளர், தவறிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களை பாதுகாக்கும் பொருட்டு அவர்களுடன் கூட்டு சேர்ந்து பொதுமக்கள் சார்பில் புகார் அளித்த சங்கத்தின் துணைத் தலைவரை பணி நீக்கம் செய்துள்ளார். எனவே இந்த விவகாரத்தில் இணைப் பதிவாளர் நேரடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.