» செய்திகள் - விளையாட்டு » உலகம்
தெற்கு சீனாவில் வரலாறு காணாத பெருமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது!
புதன் 24, ஏப்ரல் 2024 5:48:55 PM (IST)
தெற்கு சீனாவில் வரலாறு காணாத பெருமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள குவாங்டாங் மாகாணத்தில் தொடர் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. அங்குள்ள முக்கிய ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குடியிருப்புகளைச் சுற்றி சாலைகளில் வெள்ளம் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த இயற்கைப் பேரிடரில் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 10க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் மாயமானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு உள்ளனர். மேலும், சுமார் 25,000 பேர் அவசரகால முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம் ஏற்படுத்தியுள்ள பாதிப்பே இந்த பெருமழைக்கான முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. குவாங்டாங் மாகாணத்தில் கிராமப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களும் வெள்ளதில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர்.
மாகாணத் தலைநகர் குவாங்சௌவில் நிகழாண்டு ஏப்ரலில் 609 மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாகவும், வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு குவாங்சௌவில் ஏப்ரலில் அதிகப்படியான மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மரங்கள் முறிந்துள்ளதால் சாலை போக்குவரத்தும் பெரும்பாலான பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.