சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினத்தை முன்னிட்டு, ரோட்டரி கிளப் ஆஃப் பேர்ல்சிட்டி மற்றும் வீ கேன் டிரஸ்ட் சார்பில் தூய்மைப் பணி முகாம் நடைபெற்றது. இதில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
ரோட்டரி கிளப் ஆஃப் பேர்ல்சிட்டி தலைவர் கிருஷ்ணசாமி, செயலாளர் கணபதி மற்றும் நிர்வாகிகள் விக்டர், மூர்த்தி, சுஷில்குமார், குமரன், சங்கரசுப்பிரமணியன், கார்த்திகேயன், சுரேஷ், ஆனந்தகுமார், டாக்டர் விக்னேஷ் வீரபாகு, தெய்வசிகாமணி, வெங்கடேஷ் ஆகியோர் திரளான கல்லூரி மாணவர்களுடன் இணைந்து ரோச் பார்க் அருகிலுள்ள வாக்கிங் டிராக் மற்றும் இனிகோ நகர் கடற்கரைப் பகுதிகளில் தேங்கிக் கிடந்த நெகிழி மற்றும் இதர கழிவுகளை அகற்றி அப்புறப்படுத்தினர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கடலோரத் தூய்மை குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இம்முகாமில், “தூய்மையான கடற்கரை – ஆரோக்கியமான கடல் – வளமான எதிர்காலம்” என்ற விழிப்புணர்வு வாசகம் வலியுறுத்தப்பட்டது.

